சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நடக்கும் குவாலிஃபயர் 2வது போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், இந்த போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சுழலுக்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு இல்லையென்றால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது.
இதனால் அஸ்வின், சாஹல் மற்றும் மஹாராஜ் ஆகிய மூவரும் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக் ஆகிய மூவரும் சென்னை பிட்சிற்கு ஏற்றவாறு பேட்டிங் செய்யக் கூடியவர்கள். அதேபோல் சேப்பாக்கம் மைதானம் குறித்து அஸ்வினுக்கு அசாத்திய அறிவும் அனுபவமும் இருப்பதால், திட்டம் ரீதியாக ராஜஸ்தான் அணி கவனமாக இருக்கும்.
ஆனால் மறுபக்கம் ஐதராபாத் அணி முழுக்க முழுக்க கம்மின்ஸ், நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பவுலிங்கை நம்பியே களமிறங்குகிறது. ஷாபாஸ் அஹ்மத் மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் ஸ்பின் சேப்பாக்கம் மைதானத்தில் எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவை வீழ்த்தினாலே ராஜஸ்தான் அணியின் வெற்றி உறுதி செய்யப்படும்.
இருந்தாலும் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினாலே, வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் சஞ்சு சாம்சன், அஸ்வின் ஆகியோருக்கு தீவிரமான ரசிகர்கள் இருப்பதால், ராஜஸ்தான் ஜெர்சியை அதிகமாக பார்க்க முடியும் என்று கருதப்படுகிறது.