மும்பை : ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடத்தப்படுகிறது. நடப்பு சீசன் தான் தற்போது இருக்கும் அணிகளுக்கு கடைசி என்பதால் இந்த வருடம் விளையாடக்கூடிய வீரர்கள் அடுத்த ஆண்டு வருவார்களா என்று நமக்குத் தெரியாது.
இதனால் இந்த சீசன் ஒரு உணர்ச்சி பூர்வமான தொடராக ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் மெகா ஏலத்தில் இருக்கும் ஒரு முக்கிய விதியை மாற்ற வேண்டும் என பல முன்னணி அணிகள் போர் கொடி தூக்கி இருக்கிறார்கள்.

அதாவது மெகா எழுத்தில் வெறும் நான்கு வீரர்களை மட்டும் தான் ஒவ்வொரு ஐபில் அணியும் தக்க வைக்க முடியும். இதில் அதிகபட்சமாக மூன்று இந்திய வீரர்கள் மற்றும் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் ஆகியவர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதி இருக்கிறது. மேலும் முந்தைய மெகா ஏலத்தில் கொண்டுவரப்பட்ட ரைட் டூ மேட்ச் கார்டு என்ற வாய்ப்பை பயன்படுத்தி, கூடுதலாக இரு வீரர்களை தக்க வைக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த விதியை தான் மாற்ற வேண்டும் என தற்போது ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் அணிகள் தாங்கள் பெரும் கஷ்டப்பட்டு ஒரு அணியை உருவாக்கி அதனை செட் செய்வதற்குள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மீண்டும் மெகா ஏலம் நடைபெறுவதால் அணியை மீண்டும் முதலில் இருந்து தயார் செய்வது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆவது இருந்தால் மட்டுமே ஒவ்வொரு அணியும் தாங்கள் தேர்வு செய்த வீரர்களை வைத்து கோப்பையை வெல்ல முயற்சி செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இல்லை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்துவதாக இருந்தால் தற்போது இருக்கும் நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதியை மாற்றி 8 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று புதிய விதியை கொண்டு வாருங்கள் என ஐபிஎல் அணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விதி இல்லாமல் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்டால், அது ஒவ்வொரு அணிக்கும் கடினம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சிஎஸ்கே அணியை பொறுத்தவரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான வீரர்களை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். தற்போது மூன்று ஆண்டுகள்தான் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் புதிய அணியில் கொண்டு வர வேண்டும் என்றால் அவர்கள் மீண்டும் கஷ்டப்பட்டு தங்களுக்கு வேண்டிய வீரர்களை தயார் செய்ய வேண்டும். இதனை ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இந்த விதியை ரத்து செய்ய வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் வலியுறுத்தியுள்ளனர்.