கொல்கத்தா : ஒரே ஐபிஎல் போட்டியில் சதம் அடித்து, விக்கெட் வீழ்த்தி, கேட்ச் பிடித்து ஆல் - ரவுண்டராக மாபெரும் சாதனை படைத்து இருக்கிறார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன்.
2024 ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன் குவித்து வரும் சுனில் நரைன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி தனது முதல் ஐபிஎல் சதம் அடித்தார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 13 ஃபோர் மற்றும் 6 சிக்ஸ் அடித்து இருந்தார்.

இதே போட்டியில் சுழற் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்ட சுனில் நரைன் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். மேலும், சஞ்சு சாம்சன் கொடுத்த கேட்சையும் பிடித்து இருந்தார். இதன் மூலம், ஒரே போட்டியில் சதம், கேட்ச் மற்றும் இரண்டு விக்கெட்கள் என ஆல் - ரவுண்டராக ஜொலித்தார்.
ஐபிஎல் தொடரில் பல சிறந்த ஆல் - ரவுண்டர்கள் இதுவரை களம் கண்டு இருந்தாலும் யாருமே இந்த மூன்றையும் சேர்த்து செய்ததில்லை. சில ஆல் - ரவுண்டர்கள் சதம் மற்றும் விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆனால், அத்துடன் சேர்த்து கேட்ச் பிடித்ததில்லை. ஆனால், சுனில் நரைன் முழு ஆல் - ரவுண்டராக மாறி மூன்றையும் செய்தார்.
சுனில் நரைன் சிறப்பாக செயல்பட்ட போதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 224 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நிர்ணயித்த போதும், ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் கடைசி பந்து வரை களத்தில் நின்று 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.