ஐதராபாத் : கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் 3வது கேப்டனை நியமனம் செய்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் மற்றும் பயிற்சியாளராக டாம் மூடி செயல்பட்டனர். 2023ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கழற்றிவிடப்பட்டு, புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் புதிய பயிற்சியாளராக பிரையன் லாரா தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் கடந்த சீசனிலும் ஐதராபாத் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 18 நாட்களுக்கு முன்பாக ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.20.50 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸை ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. இந்திய மண்ணில் உலகக்கோப்பையை வென்றதன் விளைவாக பேட் கம்மின்ஸை வாங்க சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் போட்டிபோட்டன. இறுதியாக காவ்யா மாறன் மற்றும் டேனியல் வெட்டோரி கூட்டணி அவரை வாங்கியது.
தற்போது பேட் கம்மின்ஸை புதிய கேப்டனாக ஐதராபாத் அணி அறிவித்துள்ளது. எஸ்ஏ20 லீக் தொடரில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்று சாதனை படைத்தது. இருந்தாலும் எய்டன் மார்க்ரம் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டன்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய கேப்டனுக்கு கீழ் ஐதராபாத் அணி இழந்த பெருமையை மீட்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்ஏ20 லீக்கில் வெற்றிபெற்றாலும் ஐபிஎல் தொடரில் காவ்யா மாறன் எடுக்கும் முடிவுகள் அணிக்கு நன்மையை ஏற்படுத்தவில்லை. இந்த முடிவாவது அணியில் மாற்றத்தை கொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும். மார்ச் 23ஆம் தேதி ஐதராபாத் அணி தங்களது முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.