ராஞ்சி: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் தற்போது அனைவரின் கவனமும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவிக்க வரும் நவம்பர் 26 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கவில்லை.

அது மட்டும் அல்லாமல் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. இதற்கு காரணம் ரெய்னா கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி விட்டார் என்பதுதான். மேலும் அவர் அப்போது எந்த போட்டிகளிலும் விளையாடுவது தான். இந்த அணியும் அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இந்த நிலையில் ரெய்னா தொடர்ந்து லெஜன்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
அதில் தன்னுடைய திறமையை ரெய்னா நிரூபித்து வருகிறார். இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை ரெய்னா சந்தித்து இருக்கிறார். தோனி மற்றும் அவருடைய மனைவி ஷாக்சி ஆகியோருடன் ரெய்னா புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. தோனிக்கும் ரெய்னாவுக்கும் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் தான் ரெய்னாவை சிஎஸ்கே அணியில் தோனி எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மினி ஏலத்திற்கு முன்பாக தோனியை ரெய்னா சந்தித்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தற்போது ரெய்னாவுக்கு 36 வயது தான் ஆகிறது. அவரால் இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் திரும்பி வருவதற்கான பணிகளை ரெய்னா தோனியை சந்தித்து எடுத்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒருவேளை வீரராக இல்லை என்றாலும் ரெய்னா பிராவோ உள்ளிட்ட வீரர்கள் போல் பயிற்சியாளராக கூட திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ரெய்னா, தோனியை சந்தித்திருப்பது இரு வீரர்களின் ரசிகர்கள் படையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.