மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை நடப்பு ஐபிஎல் தொடர் மூலம் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக சின்ன தல சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
காரணம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா முதல் சீசனில் கோப்பையை வாங்கி கொடுத்தார். இரண்டாவது சீசனில் இறுதி போட்டி வரை அணியை அழைத்துச் சென்றார்.

இதனால் ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என ரசிகர்கள் முடிவு எடுத்தனர். அதற்கு தகுந்தார் போல் பிசிசிஐ சில தொடர்களில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. முதலில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, பின்னர் பல தவறுகளை செய்து மேற்கிந்திய தொடரில் அடி வாங்கினார்.
இதை அடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் டி20 போட்டியில் விளையாடாமல் இருந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளங்கினாலும், இந்த தொடரிலும் அவர் மோசமாக கேப்டன்ஷிப் செய்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறை கூறியுள்ளனர்.
இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த கேப்டனாக வரும் வாய்ப்பு குறைந்து விட்டதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா இதற்கு பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் இந்தியாவின் அடுத்த கேப்டனாக வர சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கேப்டனாக கில் நன்றாக செயல்படுவதுடன் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 23 வயதான கில் நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
7 போட்டிகளில் விளையாடிய அவர் 263 ரன்கள் குவித்து இருக்கிறார். எனினும் குஜராத் அணி விளையாட ஏழு போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பிறகு யார் வரவேண்டும் என்பது குறித்து ரசிகர்களாகிய நீங்கள் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.