டெல்லி : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் நடராஜன் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அமெரிக்காவில் லீக் போட்டிகளும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நாக் அவுட் போட்டிகளும் நடக்கவுள்ளது. இது தொடர்பான அட்டவணை ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் அறிவிப்பதற்கு மே 1ஆம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் 27ஆம் தேதி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அர்ஷ்தீப் சிங்கிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்து தயார் செய்து வரப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், டெத் ஓவர்களில் அதிகளவிலான ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார். இதனால் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் சிறந்த ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
இதனால் டி20 உலகக்கோப்பையில் அர்ஷ்தீப் சிங் இடத்தில் நடராஜன் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நடராஜன், யார்க்கர் பந்துகளை மட்டும் நம்பாமல் ஸ்லோ பவுன்சர், ஷார்ட் பால்களை சரியான லைன் மற்றும் லெந்தில் வீசி வருகிறார். இதனால் டெத் ஓவர்களில் பும்ராவுடன் இணைந்து நடராஜன் பவுலிங் செய்தால், சிறப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.