மும்பை: விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு கேப்டன் தினேஷ் கார்த்திக் தனியாளாக போராடி 93 ரன்களை விளாசியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டன. அதில் ஆர்சிபி அணி தரப்பில் பவுலர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், 38 வயதாகும் தினேஷ் கார்த்திக்கும் தக்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த சீசனிலேயே தினேஷ் கார்த்திக் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வர்ணனைக்கு திரும்பிய தினேஷ் கார்த்தி, உலகக்கோப்பை தொடரிலும் வர்ணனையாளராக செயல்பட்டார். இதனால் விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடும் என்று பார்க்கப்பட்ட நிலையில், ஆர்சிபி அணியால் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆர்சிபி நிர்வாகம் தவறான முடிவை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டன் பொறுப்பை தினேஷ் கார்த்திக் ஏற்றார். கேப்டன்சியில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தினேஷ் கார்த்திக் பொளந்து கட்டி வருகிறார். இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி பிரப்சிம்ரன் சிங் மற்றும் மந்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான அரைசதம் காரணமாக 45.2 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் அபராஜித் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் மற்றும் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியில் வெளுத்து கட்டினார். எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசிய தினேஷ் கார்த்திக் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 82 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்ஸ் உட்பட 93 ரன்களை விளாசினார்.
தமிழ்நாடு அணியில் தினேஷ் கார்த்திக்கை தவிர்த்து பாபா இந்திரஜித் மட்டும் 25 ரன்களை விளாசினார். தினேஷ் கார்த்திக்கிற்கு பின் களமிறங்கிய 5 வீரர்கள் மொத்தமாக சேர்ந்து 7 ரன்களை மட்டுமே எடுத்தனர். தனியாளாக தினேஷ் கார்த்திக் போராடி தமிழ்நாடு அணியை 175 ரன்களை எடுக்க வைத்து கவுரமான தோல்வியை பெற்றுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரிலும் தினேஷ் கார்த்திக் சிறந்த ஃபார்மில் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.