ஜெய்ப்பூர் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியால் எமோஷனலாக இருப்பதாக ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ள்து. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி நடப்பு சீசனில் முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த குஜராத் அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால் ராகுல் டிவாட்டியா மற்றும் ரஷீத் கான் இருவரும் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றினர்.
இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், இந்த ஆட்டத்தில் எங்கள் பிடி எப்போது தளர்ந்தது என்று கேட்டால், கடைசி பந்து தான் என்று சொல்ல வேண்டும். இந்த சூழலில் பேசுவதே கடினமாக உள்ளது. எனக்கு தெரிந்து, தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம் என்று நினைக்கிறேன்.
கொஞ்சம் எமோஷனலாக உள்ளேன். சாதாரண நிலைக்கு வந்த பின், நிச்சயம் ஆட்டத்தில் எங்கு தோல்வியடைந்தோம் என்று சொல்ல முடியும். நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்த போட்டிக்கு நகர வேண்டும். நான் பேட்டிங் செய்யும் போது 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன். நிச்சயம் 196 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்கு தான்.
பெரிதாக பனிப்பொழிவு இல்லாத போது, எங்கள் பவுலர்கள் செய்து முடித்திருக்க வேண்டும். நிச்சயம் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடுவது எளிதல்ல. 197 ரன்கள் இலக்கு, அதிலும் பனிப்பொழிவு வராது என்றால், அந்த ஸ்கோரை நாங்கள் தாராளமாக எடுத்துக் கொள்வோம். பவுலிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.