கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரர் விராட் கோலி அம்பயரிடம் பல முறை வாக்குவாதம் செய்ததால் அவருக்கு விதிப்படி தண்டனை அளித்துள்ளது பிசிசிஐ.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்தது. அடுத்து பெங்களூரு அணி சேஸிங் செய்யத் துவங்கியது.

துவக்க வீரராக இறங்கிய விராட் கோலி எப்படியும் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முடிவில் அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கினார். 6 பந்துகளில் 18 ரன்களை எடுத்து மிரள வைத்தார். இந்த நிலையில் ஹர்ஷித் ராணா வீசிய மூன்றாவது ஓவரில் விராட் கோலி ராணாவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த பந்து ஃபுல் டாசாக வீசப்பட்டு இருந்தது.
பேட்ஸ்மேன் கிரீஸில் நேராக நிற்கும் போது அவரது இடுப்பு உயரம் எங்கே இருக்குமோ அதற்கும் மேலே ஃபுல் டாஸ் பந்து வீசப்பட்டால் அது நோ பாலாக அறிவிக்கப்பட வேண்டும். ஹர்சித் ராணா வீசிய அந்த ஃபுல் டாஸ் தனது இடுப்பு உயரத்துக்கு மேலே வந்ததாக கருதினார் விராட் கோலி. அதனால் ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் அவர் கிரீஸை விட்டு சில அடி தூரம் முன்னே வந்திருந்ததால் கிரீஸை அடையும் போது பந்து எந்த உயரத்தில் இருக்கிறது என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட மூன்றாவது அம்பயர் விதிப்படி அந்த பந்து நோ பால் இல்லை என அறிவித்தார்.
ஆனால், அதை ஒப்புக் கொள்ள மறுத்த விராட் கோலி தலையை அசைத்துக் கொண்டே வெளியேறினார். ஆனால், மைதானத்தை விட்டு செல்லும் முன் மீண்டும் உள்ளே வந்து ஆடுகளத்தில் இருந்த இரண்டு அம்பயர்களிடமும் வாக்குவாதம் செய்தார். பின்னர் கோபமாக வெளியேறினார்.
அம்பயர்களிடம் விராட் கோலி கோபமாக நடந்து கொண்டதால் அவருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதித்து மேட்ச் ரெப்ரீ அறிவித்தார். ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டது.