பெங்களூர் : கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கை ஆர்சிபி அணியின் ஓய்வறைக்கு அழைத்து நட்சத்திர வீரர் விராட் கோலி பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் யாஷ் தயாள் பவுலிங்கில் 5 சிக்சர்களை விளாசியதன் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் ரிங்கு சிங். அந்த போட்டிக்கு பின் ரிங்கு சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை டாப் கியரில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் இந்திய டி20 அணியின் புதிய ஃபினிஷராக ரிங்கு சிங் உருவாகிவிட்டார்.

ஜனவரி மாதம் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரிங்கு சிங் ஆடிய ஆட்டம் அனைவரையும் மிரள வைத்தது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதல் பெயராக ரிங்கு சிங்கின் பெயர் இடம்பெறும் என்பது நிச்சயம். இதனால் ஐபிஎல் தொடரின் ரிங்கு சிங்கின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 9 போட்டிகளிலும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வென்று வந்த சூழலில், முதல்முறையாக ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கேகேஆர் அணி சம்பவம் செய்துள்ளது.
இந்த போட்டியில் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் கடைசி நேரத்தில் களமிறங்கியதால் பெரிதாக ரன்கள் சேர்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தேவைக்கேற்ப ரிஸ்க் எடுக்கும் ஆட்ட அணுகுமுறையை கொண்ட ரிங்கு சிங், 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இந்த நிலையில் போட்டி முடிவடைந்த பின் ரிங்கு சிங் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்துள்ளார்.
ஆர்சிபி ஓய்வறையில் விராட் கோலியை ரிங்கு சிங் சந்தித்த போது, அவருக்கு தனது பேட் ஒன்றை பரிசாக கொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் ஒன்றாக இணைந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.