எல்லை மீறிய ஐபிஎல் அணிகள்.. கோலி, பும்ரா ஈகோவை டச் செய்த சம்பவம்.. என்ன நடந்தது?
மும்பை : 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் சில வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோரை சீண்டுவதாக அமைந்தது.
அதாவது விராட் கோலியின் ஐபிஎல் சம்பளம் ஆண்டுக்கு 17 கோடி. அதே போல உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் சம்பளம் ஆண்டுக்கு 12 கோடி. இவர்கள் எல்லாம் இதுவரை ஏலத்துக்கே வராத வீரர்கள். ஐபிஎல் அணிகள் இவர்களை ஏலத்தில் விடாமல் தக்க வைத்து வருகின்றன. அதனால், அவர்களுக்கு ஏலத்தில் எந்த அளவுக்கு விலை கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது.

அதே சமயம், ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்கிற்கு 2024 ஐபிஎல் ஏலத்தில் 20 கோடிக்கும் அதிகமான விலை கிடைத்தது. பாட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாலும், மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
இதே ஏலத்தில் விராட் கோலி, பும்ரா போன்ற வீரர்கள் இப்போது பட்டியலிடப்பட்டு இருந்தால் நிச்சயம் இதே போல 20 கோடியை தாண்டி தான் அவர்களை எந்த அணியுமே வாங்க முடியும். அந்த அளவுக்கு ஏலத்தில் போட்டி இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் கோலி, பும்ராவை விட அதிக சம்பளம் வாங்கும் வீரர்களாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மாறி உள்ளனர்.
2008 ஐபிஎல் ஏலத்துக்கு பின்னர் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விட்டு எப்போதும் நீக்கப்பட்டதில்லை. அந்த அணியிலேயே அவர் தொடர்ந்து வருகிறார். அதே போல பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் தன் முதல் ஐபிஎல் அறிமுகத்தை பெற்றார். அப்போது முதல் அந்த அணியிலேயே தான் இருந்து வருகிறார்.
ஐபிஎல் அணிகள் இவர்களை போல பல முன்னணி இந்திய வீரர்களை ஒவ்வொரு ஏலத்திற்கு முன்பும் தங்கள் அணியில் தக்க வைத்து வருகின்றன. அதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், மற்ற வீரர்களை ஏலத்தில் அணிகள் போட்டி போட்டு வாங்கும் போது விலை அதிகரிக்கும். மாறாக ஒரே அணியில் தக்க வைக்கப்படும் போது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுக்கு சம்பள உயர்வு மட்டுமே கிடைக்கும்.
இந்த வேறுபாடுகள் காரணமாக இனி ஏல முறையை மாற்ற வேண்டும் என சிலரும், ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் என சிலரும் கூறி வருகின்றனர். ஆக மொத்தத்தில் ஐபிஎல் ஏலம் ஒரு எல்லையை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. வீரர்களுக்கான சம்பளத்தில் கட்டுப்பாடு வரவில்லை என்றால் எதிர்காலத்தில் ஐபிஎல் 30 கோடி, 40 கோடி என்று கூட சம்பளம் உயரக் கூடும்.


Click it and Unblock the Notifications