மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து கடும் விமர்சனம் எழுந்து இருக்கும் நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான் சமூக வலைதளங்களில் அவரை சீண்டும் வகையில் பதிவிட்டு வருகிறார்.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த பின் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்கக் கூடாது அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளது. அவர் கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்க்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை சிலர் முன் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி ஐபிஎல் தொடரில் 67 பந்துகளில் சதம் அடித்தார். அவர் எட்டாவது ஐபிஎல் சதம் அடித்ததை பலரும் பாராட்டிய நிலையில் சிலர் அவர் ஐபிஎல் வரலாற்றிலேயே மெதுவாக அடிக்கப்பட்ட சதம் என்பதை சுட்டிக் காட்டி வரை விமர்சனம் செய்தனர். ஜுனைத் கானும் அதை சுட்டிக் காட்டி விராட் கோலியை கிண்டல் செய்திருந்தார். அப்போது அவர் "ஐபிஎல் தொடரிலேயே மெதுவாக சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்" என கூறி இருந்தார்.
அதன் பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் முதல் சில பந்துகளில் பிட்ச்சை கணிக்க முயன்றார். ஆனால், அவரால் பந்தை சரியாக கணித்து அடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில், அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 33.33 என்பதாக இருந்தது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது ஜுனைத் கான் வெளியிட்ட பதிவில், "ஸ்ட்ரைக் ரேட் 33.33" என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதை அவர் கிண்டல் செய்து இருக்கிறார். இதன் பதிவின் கீழ் விராட் கோலி ரசிகர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜுனைத் கான் விராட் கோலியை குறி வைத்து விமர்சனம் செய்ய ஒரு காரணம் உள்ளது. ஜுனைத் கான், விராட் கோலி மோதல் கிரிக்கெட் உலகில் சுவாரசியமான ஒன்று. இருவரும் மூன்று போட்டிகளில் சந்தித்து உள்ளனர். அந்த மூன்று போட்டிகளில் 24 பந்துகள் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முறையும் விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றினார் ஜுனைத் கான். அதன் பின் விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக அறியப்படும் நிலையில் அவரை ஜுனைத் கான் அவ்வப்போது சீண்டி வருகிறார்.