பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணி பலப்பரிட்சை நடத்துகிறது. அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஆர்சிபியும் ஒன்று.
விராட் கோலி ஜெயிஸ்வால், ஏபி டிவில்லியர்ஸ், கே எல் ராகுல், வாட்சன், மேக்ஸ்வெல் போன்ற ஸ்டார் வீரர்கள் அந்த அணியில் கடந்த காலங்களில் விளையாடியிருந்தும் அவர்களால் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில் இம்முறையும் rcb அணியின் பேட்டிங் பலமாகவே இருக்கிறது. விராட் கோலி, டுபிளசிஸ், மேக்ஸ்வெல், ரஜட் பட்டிதார்,கேமரான் கிரீன், முகமது சிராஜ் போன்ற நட்சத்திர வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இந்த நிலையில் rcb அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி, விராட் கோலியால் மட்டும் ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்று தர முடியாது என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், விராட் கோலியின் திறமை மற்றும் தகுதியை நீங்கள் கொஞ்சம் கூட கேள்வி கேட்க முடியாது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் விராட் கோலி தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் விராட் கோலியால் மட்டுமே ஆர் சி பி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தர முடியாது.
ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அணியின் ஒருங்கிணைந்த முயற்சி இருந்தால் மட்டுமே விராட் கோலியால் கோப்பையை வெல்ல முடியும். எப்போதுமே ஒரு தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அது ஒரு தனிப்பட்ட வீரரால் முடியாது. விராட் கோலி எவ்வளவு சதங்கள் அடித்தாலும் மற்ற வீரர்கள் அணிக்காக உதவி செய்ய வேண்டும்.

ஆர் சி பி அணியில் கடந்த சீசனில் முகமது சிராஜ் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்போது ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். எனினும் அல்சாரி ஜோசப், லோகி பேகுர்சன், டாம் கரண், யாஸ் தயால் போன்ற வீரர்கள் அணியில் புதிய வீரர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். எனினும் ஆர்சிபி அணியின் சுழற் பந்துவீச்சு மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.