சென்னை: ஐபிஎல் ஏலத்தில் என் பெயர் அறிவிக்கப்பட்ட போது எனது மனைவியுடன் அமர்ந்து டிவியில் பார்த்த காட்சிகளை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் டேரல் மிட்செல் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள் உட்பட 552 ரன்களை விளாசியவர் டேரல் மிட்செல். அதிலும் இந்திய அணிக்கு எதிரான 2 போட்டிகளில் டேரல் மிட்செல் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் இரு தரப்பையும் மிட்செல் எதிர்த்து ஆடிய விதம் பலரையும் வியக்க வைத்தது.

வில்லியம்சனுக்கு இணையான மற்றொரு வீரர் நியூசிலாந்து அணிக்கு கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் வியந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் டேரல் மிட்செல் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் சிஎஸ்கே அணி தரப்பில் டேரல் மிட்செல் வாங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணித்தனர்.
ஆனால் டேரல் மிட்செலை வாங்க தொடக்கத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டி போட்டன. ரூ.12 கோடி தொகையை எட்டிய போது, டெல்லி அணி ஏலத்தில் இருந்து பின் வாங்கியது. அதன்பின் களம்புகுந்த சிஎஸ்கே அணி நிர்வாகம், டேரல் மிட்செலை ரூ.14 கோடிக்கு தட்டி தூக்கியது. ஏற்கனவே சான்ட்னர், கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய 3 வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்த நிலையில், தற்போது 4வது வீரராக மிட்செல் இணைந்துள்ளார்.
இதனால் அம்பாதி ராயுடுவுக்கு சரியான மாற்று வீரராக டேரல் மிட்செல் இருப்பார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத டேரல் மிட்செல், நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது அவருக்கு ஆச்சரியமளிக்கும் செய்தியாக அமைந்தது.
இதுகுறித்து சிஎஸ்கே வீரர் டேரல் மிட்செல் பேசுகையில், மிட்செல் சான்ட்னர் தான் எனக்கு முதன்முதலில் மெசேஜ் அனுப்பினார். அவர் நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் மிகமுக்கிய வீரராக இருந்து வருகிறார். ரூ.14 கோடி ஐபிஎல் ஒப்பந்தம் மூலம் எனது குடும்பத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
அன்றைய இரவு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான இரவாக அமைந்தது. மனைவியின் அருகில் அமர்ந்து மொத்த ஏலத்தையும் டிவியில் பார்த்தேன். ஐபிஎல் ஏலத்தில் எனது பெயர் சொல்லப்பட்ட பின், நானும் என் குடும்பத்தினரும் டிவியில் பார்த்த காட்சிகள் எங்களின் வாழ்நாள் முழுக்க இருக்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.