சென்னை: வழக்கமாகவே டிரேட் செய்ய கூடாது என்று கொள்கையுடன் இயங்கி வரும் சிஎஸ்கே அணி, மும்பையுடன் டிரேடிங்கில் ஈடுபட பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக மும்பை அணியில் புயல் அடித்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியதோடு, உடனடியாக கேப்டனாக அறிவிக்காமல் வேண்டுமென்றே டிரான்ஸ்ஃபர் வின்டோ முடிவடைந்த பின் கேப்டனாக அறிவித்தது. இதன் காரணமாக ரோகித் சர்மா விரக்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாருமே வாழ்த்து கூட கூறவில்லை. இதனால் 3 பேரில் ஒருவர் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. அதிலும் பும்ரா அதீத அதிருப்தியில் இருப்பதால், நிச்சயம் அணி மாறுவார் என்று விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் வீரர்களுக்கு பணத்தை வாரி இரைத்தது. இதனால் இனி பணத்திற்காக எந்த வீரரும் வாங்க வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மும்பை அணி வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு வருவதாக வெளியாக தகவல் குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் பேசுகையில், வழக்கமாக எந்த வீரரையும் டிரேட் செய்ய கூடாது என்ற கொள்கையுடன் சிஎஸ்கே அணி இயங்கி வருகிறது. அதேபோல் மும்பை அணிக்கு கொடுக்கும் வகையில் எந்த வீரரும் எங்களிடம் இல்லை. அவர்களிடம் டிரேட் செய்வதற்கு எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் அந்த எண்ணம் கூட எங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மும்பை அணியில் இருந்து எந்த வீரரும் வெளியேறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி டிரேடிங் மூலமாக வீரர்களை வாங்க முயற்சிக்கும், ஆனால் எந்த சூழலிலும் ஏலத்தில் வாங்கிய வீரர்களை டிரேடி செய்யாது என்று வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.