பெங்களூரு: அல்ஜாரி ஜோசப் மற்றும் யாஷ் தயாள் இருவரும் ஆர்சிபி அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஆர்சிபி அணி தரப்பில் வாங்கப்பட்ட வீரர்களை அந்த அணியின் ரசிகர்களே கிண்டல் செய்து வருகின்றனர். ஆர்சிபி பேட்டிங் லைன் அப்பை போல் தரமான பவுலர்களை புதிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அல்ஜாரி ஜோசப்பை ரூ.11.50 கோடிக்கும் யாஷ் தயாள் ரூ.5 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.

அதேபோல் டாம் கரண் ரூ.1.5 கோடிக்கும், ஃபெர்குசன் ரூ. 2 கோடிக்கும், ஸ்வப்னில் சிங் ரூ.20 லட்சத்திற்கும், சவுரவ் சவுகான் ரூ.20 கோடிக்கும் வாங்கப்பட்டனர். இதனை ஆர்சிபி அணியுடன் பணியாற்றிய அனாலிஸ்டான பிரசன்னாவே, நீ தான் என் ஐஸ்வர்யா ராய் என்று கிண்டல் செய்தது ஆர்சிபி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதேபோல் குஜராத் அணியின் பவுலர்களை ஆர்சிபி அணி அப்படியே வாங்கியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அல்ஜாரி ஜோசப் மற்றும் யாஷ் தயாளை வாங்கியதற்கு பயிற்சியாளர் ஆண்டி பிளவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆர்சிபி அணியில் கேமரூம் க்ரீனை ட்ரேட் செய்து கொண்டு வந்ததற்கு மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் கிடைக்கும். அதேபோல் பவுலர்கள் மீது ரசிகர்களிடையே சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஆனால் யாஷ் தயாளை பொறுத்தவரை கடந்த ஆண்டிலேயே அவரின் திறமையை அறிந்து கொண்டோம். புதிய பந்தில் ஸ்விங் செய்வதோடு, விக்கெட் டேக்கராக இருக்கிறார். நிச்சயம் டெத் ஓவர்களில் அவரின் ரெக்கார்ட்கள் சரியாக இல்லை. ஆனால் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆர்சிபி அணிக்காக அவர் சிறப்பாக செயல்படுவார். அதேபோல் கம்மின்ஸை வாங்க முயற்சித்தோம்.
ஆனால் அதிக தொகைக்கு சென்றதால், எங்களால் வாங்க முடியவில்லை. அதனால் அல்ஜாரி ஜோசப்பை வாங்கியுள்ளோம். செண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக டூ பிளசிஸ் விளையாடிய போது அல்ஜாரி ஜோசப்பை பார்த்துள்ளார். அதேபோல் எஸ்ஏ டி20 லீக் தொடரிலும் ஒன்றாக விளையாடி வருகிறார். இதனால் ஆர்சிபி அணியில் அல்ஜாரி ஜோசப் நிச்சயம் சிறந்த வீரராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.