லக்னோ : வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான ஷமார் ஜோசப் லக்னோ அணிக்காக விளையாட ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை அனைவரையும் மீண்டும் பார்க்க வைத்த வீரர்களில் முக்கியமானவர் ஷமார் ஜோசப். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதை தட்டி சென்றனர். ஆஸ்திரேலியாவின் கோட்டையான காபா மைதானத்தில் வைத்து ஒற்றை ஆளாக வீழ்த்தி காட்டினார் ஷமார் ஜோசப்.

காலில் ஏற்பட்ட காயத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தொடர்ச்சியாக 10 ஓவர்களுக்கு அதிகமாக வீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்களே மிரண்டு போய் பாராட்டினர். உலகமே கொண்டாடும் பேட் கம்மின்ஸ், ஷமார் ஜோசப்பிடம் ஜெர்சியில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்.
ஆனால் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஷமார் ஜோசப்பை எந்த அணி நிர்வாகமும் வாங்குவதற்கு முன் வரவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் காட்டிய ஆக்ரோஷத்தை பார்த்த பின், தென்னாப்பிரிக்கா முன்னாள் அனாலிஸ்ட்டான பிரசன்னாவிடம் 3 அணிகள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது நிச்சயம் ஷமார் ஜோசப் ஐபிஎல் தொடரில் சிறந்த அணியுடன் இணைவார் என்று கூறியிருந்தார்.
இதனால் சிஎஸ்கே, கொல்கத்தா அல்லது ஆர்சிபி அணிகளால் ஷமார் ஜோசப் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் லக்னோ அணி தரப்பில் ரூ.3 கோடி கொடுத்து ஷமார் ஜோசப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் விலகியதால், உடனடியாக ஷமார் ஜோசப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கு சரியான காரணங்கள் கூறப்படவில்லை. ஷமார் ஜோசப் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஸ்ரீராம் ராகவன் இருவருமே காரணம் என்று கூறப்படுகிறது.