சென்னை: நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்களை குறி வைத்து சிஎஸ்கே அணி வாங்குவதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை சிஎஸ்கே அணி தரப்பில் 3 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய வீரரான ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணியை சேர்ந்த இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கும், டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐபிஎல் ஏலத்தில் இவர்களை தவிர்த்து சிஎஸ்கே அணி நிர்வாகம் டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய ஆஸ்திரேலியா அணி வீரர்களை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது. ஆனால் அவர்களின் விலை ரூ.5 கோடியை தாண்டிய போது, ஏலத்தில் இருந்து விலகி கொண்டது. சிஎஸ்கே அணிக்கு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளருக்கான தேவை இருந்தும், ஏன் கம்மின்ஸை வாங்க விருப்பமில்லை என்று புரியாமல் குழம்பியுள்ளனர்.
ஆனால் அண்மை காலங்களில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆஸ்திரேலியா அணி வீரர்களை வாங்க பெரியளவில் விருப்பம் காட்டவில்லை. கடைசியாக ஹேசல்வுட்டை மட்டுமே வாங்க ஆர்வம் காட்டியது. அவரும் ரூ.7 கோடிக்கு மேல் ஏலம் சென்ற போது, அவரை வாங்க விரும்பவில்லை. இதற்கு ஆஸ்திரேலியா அணியின் வீரர்களின் மனநிலையே காரணமாக பார்க்கப்படுகிறது.
மெகா ஏலத்தில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவிட்டு, அதற்கு பதிலாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். கடந்த 4 முதல் 5 ஐபிஎல் சீசன்களாகவே இது தொடர்ந்து வருகிறது. இதனையறிந்த சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆஸ்திரேலிய அணி வீரர்களை வாங்காமல், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்களை வாங்க விரும்பி வருகிறது.
அதேபோல் ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக பிரம்மாண்ட வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். ஐபிஎல் அணிகளுக்கு விஸ்வாசமாக இருக்கும் வீரர்களை தேடி தேடி சிஎஸ்கே அணி நிர்வாகம் தேர்வு செய்வது வருவதால், ஆஸ்திரேலியா அணி வீரர்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று பார்க்கப்படுகிறது.