சென்னை: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயரை பார்த்த போது உற்சாகமடைந்ததாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டன. அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனி சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரே அவருக்கான கடைசி சீசனாக பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் இன்னொரு சீசன் விளையட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் 17வது ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார். 42 வயதிலும் சென்னை அணியை வழிநடத்த தோனி கடைசி முறையாக களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடப்பு சீசனிலேயே சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது ரசிகர்களுக்கு தெரிய வரும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் தோனியின் கடைசி சீசனை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் தோனி மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளது குறித்து தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தோனியின் கம்பேக் குறித்து டி வில்லியர்ஸ் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த சீசனில் தோனி விளையாடிய போதே, அதுதான் அவரின் கடைசி சீசன் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர் மீண்டும் ஐபிஎல் சீசனில் விளையாட தயாராகிவிட்டார். தோனி எப்போதும் ஆச்சரியமான வீரர் தான்.
யாருக்கு தெரியும், தோனி இன்னும் 3 சீசன்களை கூட விளையாடுவார் என்று தோன்றுகிறது. அவர் பெயரை பார்த்த போது உற்சாகமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீசனில் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும், சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் களமிறங்குவார் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.