லக்னோ : லக்னோ அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மணிக்கு 155.2 கிமீ வேகத்தில் வீசியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. லக்னோ அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா 43 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களும் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் கூட்டணி களமிறங்கியது. இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, பஞ்சாப் அணியின் ஸ்கோர் பவர் பிளே ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
இதனால் 9 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 88 ரன்களாக இருந்தது. லக்னோ அணிக்கு கட்டாயம் ஒரு விக்கெட் தேவையாக இருந்தது. இந்த நிலையில் அறிமுக வீரர் மயங்க் யாதவ் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே 147.1 வேகத்தில் பவுலிங் செய்ய, 3வது பந்தில் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனால் வர்ணனையில் இருந்த அனைவரும் யார் இந்த மயங்க் யாதவ் என்று கேட்க தொடங்கினார்கள்.
இருப்பினும் முதல் ஓவரில் 10 ரன்கள் செல்ல, மீண்டும் 12வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தை மயங்க் யாதவ் 155.2 கிமீ வேகத்தில் வீசி அசரடித்தார். ஒரு நிமிடம் ஷிகர் தவான் இந்த பந்தை எதிர்கொள்ள பதறினார் என்றே சொல்லலாம். அந்த ஓவரின் 4வது பந்தில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தி தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 14வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் ஒரு சிக்ஸ் அடிக்க, அடுத்த பந்தில் கொஞ்சம் வேகத்தை அதிகரித்து நெஞ்சை நோக்கி வீசினார்.
அதனை அடிக்க முயன்று பிரப்சிம்ரன் சிங் 19 ரன்களில் வெளியேறினார். ஒரு பந்தில் கூட வேகத்தை குறைக்காமல் முழு கட்டுப்பாட்டுடன் மயங்க் யாதவ் வீசியது தான் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிரடி வீரரான ஜித்தேஷ் சர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனால் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 12 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மயங்க் யாதவ் அசத்தியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த இவர் இதுவரை 2 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். 21 வயதாகும் இவர், முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதன் மூலம் உம்ரான் மாலிக்கிற்கு பின், 155 கிமீ வேகத்தில் வீசக் கூடிய இன்னொரு இந்திய பவுலர் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.