லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். கே எல் ராகுல் இனி அந்த அணியில் இம்பாக்ட் வீரராக இருப்பார் என நிக்கோலஸ் பூரன் அறிவித்து இருக்கிறார். கே எல் ராகுல் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்னணி என்ன? நிக்கோலஸ் பூரன் கேப்டன் ஆனது ஏன்?
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரைத் துவங்கும் போது கே எல் ராகுல் தான் கேப்டன் என் அறிவிக்கப்பட்டு இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அவரே கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அந்தப் போட்டியில் 194 ரன்களை சேஸிங் செய்த போது கே எல் ராகுல் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் அரைசதம் அடித்த போதும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 132 ஆகவே இருந்தது. அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் அதற்கு ராகுல் ஸ்ட்ரைக் ரேட் தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்தது.

அது மட்டுமின்றி, கே எல் ராகுல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் காயத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் விளையாடத் துவங்கி இருக்கிறார். அவருக்கு இன்னும் சில அசௌகரியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு அனுமதி அளித்த பிசிசிஐ, அவர் பேட்டிங் மட்டுமே செய்ய வேண்டும், விக்கெட் கீப்பிங் செய்யக் கூடாது என கூறியது. ஆனாலும், முதல் போட்டியில் வம்படியாக விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல்.
லக்னோ அணியில் க்விண்டன் டி காக் மற்றும் நிக்கோலஸ் பூரன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருந்த போதும் ராகுல் கீப்பிங் செய்தார். இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் அவர் கேப்டன்சி மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போட வந்த புதிய கேப்டன் நிக்கோலஸ் பூரன், கே எல் ராகுலுக்கு ஐபிஎல் தொடரின் இடையே ஓய்வு அளிக்கப்படலாம் என்பதால் அவரை இனி இம்பாக்ட் வீரராக மட்டுமே பயன்படுத்த இருக்கிறோம் என்றார்.
கே எல் ராகுல் காயம் மட்டுமே இந்த கேப்டன்சி மாற்றத்துக்கு காரணம் அல்ல. அவர் நிதானமாக பேட்டிங் ஆடுவதோடு கேப்டனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என லக்னோ அணி நிர்வாகம் கருதி இருக்கலாம். ஏனெனில், நிக்கோலஸ் பூரன் இரண்டு டி20 தொடர்களை கேப்டனாக வென்று கொடுத்து இருக்கிறார். அமெரிக்க டி20 தொடரான எம்எல்சி தொடரில் நியூயார்க் எம்ஐ அணியின் கேப்டனாக கோப்பை வென்று கொடுத்த பூரன், அடுத்து இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். டி20 கோப்பை வென்ற நிக்கோலஸ் பூரனை கேப்டனாக்க வேண்டி கே எல் ராகுலின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு இருக்கலாம்.