மும்பை: கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்திய வீரர் ஹர்சல் படேல் நீண்ட ஆண்டுகளாக மனைவியை அமெரிக்காவில் தனியே விட்டு இந்தியாவில் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இந்திய வீரர் ஹர்சல் படேல் ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். குஜராத் மற்றும் லக்னோ அணிகள் ஹர்சல் படேலை வாங்க தீவிரமாக முயற்சித்த நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா, ஹர்சல் படேல் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதன் பிரீத்தி ஜிந்தா பேசுகையில், ஹர்சல் படேல் ஏலத்திற்கு வருவார் என்று நினைத்து பார்க்கவில்லை. ஏலத்திற்கு அவர் வருவதை உறுதி செய்த பின், நிச்சயம் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிவித்தார். இதுவரை 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்சல் படேல் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பெங்களூரு மைதானத்தில் இவர் வீசும் ஸ்லோயர் பந்துகள் எளிதாக கணிக்க முடிவதால், ஆர்சிபி அணி அவரை விடுவித்தது. இந்த நிலையில் ஹர்சல் படேலின் சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளித் தோழியை கரம்பிடித்துள்ள ஹர்சல் படேல், ஒருமுறை கூட அவரை ஐபிஎல் போட்டிகளை காண்பதற்கு அழைத்து வந்ததில்லை.
பள்ளித் தோழியான தேவர்ஷி ஜோஷி, பள்ளி படிப்பிற்கு பின் அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க சென்றுள்ளார். அப்போதே இருவரும் காதலித்து வந்த நிலையில், ஹர்சல் படேல் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே தங்கியுள்ளார். இவரின் குடும்பத்தினரும் 2005ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த சூழலில், ஹர்சல் படேலுக்கு க்ரீன் கார்டு இருப்பதும் தெரிய வருகிறது.
நீண்ட நாள் காதலியான தேவர்ஷி ஜோஷியை சில ஆண்டுகளுக்கு முன் கரம்பிடித்த ஹர்சல் படேல், மனைவியை ஒருமுறை கூட இந்தியாவுக்கு அழைத்து வந்ததில்லையாம். இவர் தான் விடுமுறை நாட்களில் அமெரிக்காவுக்கு சென்று மனைவியுடன் நேரம் செலவிட்டு, குடும்பத்தினரை சந்தித்து வருவாராம். அமெரிக்காவில் ஃபேஷன் டிசைனராக உள்ளார் தேவர்ஷி ஜோஷி. இதன் காரணமாகவே மனைவியுடன் எந்த நிகழ்ச்சிகளிலும் ஹர்சல் படேலை காண முடிவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.