பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மிக முக்கியமான ஆட்டமாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உடன் இன்று பலப்பரிட்சை நடத்துகிறது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு ஒரு கூடுதல் சாதகமான விஷயம் இருக்கின்றது.

அதாவது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் குவாலிபயர் ஒன்றில் விளையாட முடியும். அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். அப்படி குவாலிபையர் ஒன்றில் எதிர்பாராத விதமாக தோற்க நேரிட்டால் குவாலிபையர் 2 போட்டியில் விளையாட மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைக்கும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம். இதனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கவே பல அணிகளும் போராடும்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப்க்கு இன்னும் தகுதி பெறாத நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அவர்கள் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு செல்ல வாய்ப்பு ஏற்படும். எனினும் அதே இடத்தில் நீடிக்க வேண்டுமென்றால் சிஎஸ்கே அணிக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றது. அதாவது நாளை இறுதி லீக் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கவுகாத்தியில் பலப்பரிட்சை நடத்துகின்றது.
இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் நிறைவு செய்து மூன்றாம் இடத்தில் இருக்கும். இதன் மூலம் சிஎஸ்கே அணி, ராஜஸ்தானை விட அதிக ரன் ரேட்டில் இருப்பதால் இரண்டாவது இடத்தில் நிறைவு செய்யும். இதன் காரணமாக வரும் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் சிஎஸ்கே, கொல்கத்தா அணியுடன் விளையாடலாம்.
இதனால் இன்றைய ஆட்டம் எப்படியாவது ஆர்சிபி அணியை, சிஎஸ்கே தோற்கடிக்க வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே அணி தோற்றால் கூட 18 ரன்கள் வித்தியாசத்திற்குள் தோற்க வேண்டும். இல்லை என்றால் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சென்றுவிடும். பரமபதம் விளையாட்டு போல் தற்போது ஐபிஎல் தொடர் மாறி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.