IPL 2024 : ரொம்ப ஓவர்.. ஏலப் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன நடந்தது?
மும்பை : முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கேதார் ஜாதவ்-இன் பெயர் 2024 ஐபிஎல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு காரணம் கேதார் ஜாதவ் தனக்கு தானே அதிக அடிப்படை ஏல விலை நிர்ணயித்துக் கொண்டது தான் என கூறப்படுகிறது.
கேதார் ஜாதவ் ஆல் - ரவுண்டர் என சொல்லப்பட்டாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே அதிகம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும், இந்திய அணியிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

2018 ஐபிஎல் தொடர் தான் கேதார் ஜாதவுக்கு தனிப்பட்ட முறையில் ஐபிஎல் தொடரில் பணம் கொட்டிய காலம். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 7.80 கொடிக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது. நான்கு ஆண்டுகள் கேதார் ஜாதவ் சிஎஸ்கே அணியில் நீடித்தார். ஆனால், அப்போது பல போட்டிகளின் தோல்விக்கு கேதார் ஜாதவின் மந்தமான பேட்டிங் தான் காரணம் என்ற விமர்சனமும் எழுந்தது.
அதன் பிறகு 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அதன் பின் 2023 ஐபிஎல் மினி ஏலத்திலும் யாரும் அவரை வாங்கவில்லை. எனினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி காயத்தால் தொடரில் இருந்து வெளியேறிய டேவிட் வில்லிக்கு பதிலாக, கேதார் ஜாதவை அணியில் சேர்த்தது. அப்போது ஒரு போட்டியில் பேட்டிங் ஆடி 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.
அதன் பின் தற்போது 2024 ஐபிஎல் ஏலத்தில் தன் பெயரைக் கொடுத்து இருந்தார் கேதார் ஜாதவ். ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனக்கான அடிப்படை விலையாக 2 கோடியை அவர் நிர்ணயம் செய்து இருந்தார். 50 லட்சம் என அடிப்படை விலை நிர்பயம் நிர்ணயம் செய்து இருந்தால் கூட சில அணிகள் அவரது அனுபவத்துக்காக அவரை வாங்கி இருக்கக் கூடும். ஆனால், 2 கோடியாக அவர் விலை நிர்ணயம் செய்ததால் இறுதி ஏலப் பட்டியலில் கேதார் ஜாதவ் பெயர் இடம் பெறவில்லை.
முன்னதாக 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க 1166 வீரர்கள் தங்கள் பெயர்களை கொடுத்து இருந்தனர். அதில் 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2 கோடி அடிப்படை விலையில் கேதார் ஜாதவ் உட்பட நான்கு இந்திய வீரர்கள் பெயர் கொடுத்த நிலையில், மற்ற மூவர் பெயர்கள் இறுதி ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கேதார் ஜாதவ் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications