சென்னை : இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை சுமக்க வேண்டுமென்றால் ஆயிரம் மடங்கு அரசியலையும், அழுத்தத்தையும் சமாளிக்க வேண்டும் என்று ஜஸ்டின் லாங்கரை கேஎல் ராகுல் எச்சரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் பிசிசிஐ, இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையில் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பயிற்சியாளர் பொறுப்புக்கு யார் யார் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே அடுத்த பயிற்சியாளருக்கான ரேசில் கவுதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளெமிங், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரின் பெயர்கள் இருந்தன.
இந்த போட்டியில் இருந்து ரிக்கி பாண்டிங் மற்றும் பிளெமிங் ஆகியோர் விலகியுள்ளதாக அவர்களே கூறியுள்ளனர். இந்த நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு தேடி வரும் போது நிச்சயம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதேபோல் அழுத்தமும் கூடுதலாக இருக்கும். இந்திய அணியின் பயிற்சியாளர் தொடர்பாக எங்கள் அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் சிறிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.
அப்போது கேஎல் ராகுல் என்னிடம், ஒரு ஐபிஎல் அணியில் அரசியலும், அழுத்தமும் உள்ளது என்று நினைத்தீர்கள் என்றால், அதனை விடவும் ஆயிரம் மடங்கு அரசியலையும், அழுத்தத்தையும் இந்திய அணியின் பயிற்சியாளராக எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். அதுவொரு நல்ல அட்வைஸாக கருதுகிறேன். நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு சிறந்தது தான். ஆனால் அது எனக்கானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.