மும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தற்போது ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் வேறு எந்த கிரிக்கெட் சார்ந்த பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை. அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பிய போது தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்றை கூறினார்.
குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங்குடன் ஒன்றாக விளையாடியவர். நண்பரும் கூட. நீண்ட காலமாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருக்கும் யுவராஜ் சிங், பயிற்சியாளராக விரும்பி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஒரு நபராக தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அவரிடம் உதவி கேட்டு இருக்கிறார்.

ஆனால், ஆஷிஷ் நெஹ்ரா முடியாது என அவரிடம் முகத்தில் அடித்தாற் போல கூறி இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி உருவான பின் அதன் முதல் சீசனியிலேயே ஐபிஎல் கோப்பை வென்றதால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அந்த அணியில் கூடுதல் செல்வாக்கு உள்ளது. அவர் நினைத்து இருந்தால் யுவராஜ் சிங்கை ஆலோசகராகவோ, பேட்டிங் அல்லது ஃபீல்டிங் பயிற்சியாளராகவோ சேர்த்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், அவர் மறுத்து இருக்கிறார்.
இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த யுவராஜ் சிங், தான் இளம் வீரர்களுக்கு வழிகாட்ட விரும்புவதாகவும், தன் குழந்தைகள் பள்ளி செல்லும் வயது வந்தவுடன் தான் பயிற்சியாளர் பணியில் ஈடுபட உள்ளதாகவும், ஆனால், வாய்ப்புகளும் அமைய வேண்டும் எனவும் கூறினார்.
யுவராஜ் சிங் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சில இளம் வீரர்களை தன் வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு தீவிர கிரிக்கெட் பயிற்சி கொடுத்தார். அதில் ஒருவர் தான் இன்று அடுத்த விராட் கோலி, அடுத்த சச்சின் என பலராலும் பாராட்டப்படும் சுப்மன் கில். அந்த வகையில் யுவராஜ் சிங் உள்ளூர் அணிக்கு பயிற்சியாளராக வந்தால் கூட இந்திய அணிக்கு பல நல்ல வீரர்கள் கிடைப்பார்கள் என நம்பலாம்.