மும்பை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹலை தவிர்த்து மற்ற அனைத்து இளம் ஸ்பின்னர்களும் வேகமாக வீசி வருவதாக ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை சாஹல் படைக்கவுள்ளார். இதுவரை 151 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சாஹல், 199 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த சீசனிலும் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 12 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.

டி20 கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களின் அதிரடியை கட்டுப்படுத்த புதிய ஆயுதமான ஸ்லைடர் பந்துகளை வீசி அசரடித்து வருகிறார். ஃபீல்டிற்கு ஏற்ப அவர் பவுலிங் செய்வதால், அவரது பவுலிங்கில் சிக்ஸ், பவுண்டரிகள் விளாசுவது கடினமாகி வருகிறது. இதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்தம் இல்லையென்றாலும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் சாஹல் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், சாஹல் ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் வேறு யாரும் அவரை போல் இல்லை. நான் சாஹலின் தீவிர ரசிகன் என்று வெளிப்படையாக சொல்லி கொள்கிறேன். ஐபிஎல் தொடரில் ஸ்பின் செய்யும் ஒரே சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தான். குறைந்த வேகத்தில் வீசுவதோடு, பந்தை பிளைட் செய்வதற்கும் கொஞ்சம் கூட அஞ்சாமல் வீசுகிறார்.

தற்போது ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களின் அதிரடியில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக ஸ்பின்னர்கள் வேகமாக வீசி வருகிறார்கள். ஆனால் சாஹல் அங்கு தான் வித்தியாசப்படுகிறார். அவர் பவுலிங்கில் பவுண்டரி அடிக்கப்பட்டாலும், ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது என்னை ஈர்த்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ரவி பிஷ்னாய், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹர், சுனில் நரைன், க்ருனால் பாண்டியா உள்ளிட்டோர் பெரும்பாலான நேரங்களில் வேகத்தை அதிகரித்தே பவுலிங் செய்து வருகின்றனர். அதிலும் ரவி பிஷ்னாய் 6 பந்துகளில் 6ஐயும் கூக்ளி பந்துகளாக வீசி வருகிறார். அதேபோல் குல்தீப் யாதவ் சில நேரங்களில் 115 கிமீ வேகத்தில் பந்துவீசி வருவதும் குறிப்பிடத்தக்கது.