மும்பை: இந்தியாவில் ஐபிஎல் தொடர் திருவிழாவை போல் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் எஸ்ஏ20 லீக், மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றிலும் முதலீடு செய்திருக்கின்றனர். குறிப்பாக ஐபிஎல் அணிகளின் பெயரிலேயே எஸ்ஏடி20 லீக் அணிகளின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவிலும் அந்த அணிகள் விளையாடும் போட்டிகளை ரசிகர்கள் தீவிரமாக பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் இங்கிலாந்தில் 100 பந்துகளை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்ட ஹன்ட்ரட் லீக் தொடர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் ஹன்ட்ரட் லீக் தொடரில் முதலீடு செய்ய பல்வேறு தரப்பினரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்துள்ளது.

அந்த வகையில் ஐபிஎல் அணிகளின் 10 உரிமையாளர்களையும் ஹன்ட்ரட் லீக் தொடரில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் லீக் நிர்வாகி பேசுகையில், சிறிய அளவிலான முதலீடு கிடைத்தால் கூட அதிக ஹன்ட்ரட் லீக் அணிகளை வாங்கிய உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக அமையும். குறிப்பாக ஐபிஎல் உரிமையாளர்கள் 8 அணிகளிலும் சிறிய பங்குகளை வாங்க வேண்டும்.
அனைத்து ஐபிஎல் உரிமையாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 10 அணிகளின் உரிமையாளர்களும் நிச்சயம் பங்கு வாங்க தயாராக இருப்பதாகவே கூறுகின்றனர். ஆனால் அவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு, சில அதிகாரங்களை எதிர்பார்க்கின்றனர். ஐபிஎல் தொடர் பெரிய பிராண்ட் என்பதால், அவர்கள் அணிகளின் பெயர்களை மாற்ற விரும்புகின்றனர்.
அந்த முடிவு அவர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ், மான்செஸ்டர் சிட்டி உரிமையாளர் ஆவ்ரம் கிளேசர் ஆகியோரையும் ஹன்ட்ரட் லீக்கில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து கவுண்டி அணியான யார்க்ஷையரில் ராஜஸ்தான் அணி முதலீடு செய்துள்ளது.
அதேபோல் சதர்ன் பிரேவ் அணியின் பங்குகளை வாங்க டெல்லி அணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அம்பானி மற்றும் சிஎஸ்கே அணிகளின் உரிமையாளர்களின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருவேளை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஹன்ட்ரட் லீக்கிலும் முதலீடு செய்யும் பட்சத்தில், வெளிநாட்டு வீரர்களின் தலையெழுத்தை கூட ஐபிஎல் உரிமையாளர்களால் நிர்ணயிக்க முடியும் என்ற நிலை உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.