மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் இந்திய பயிற்சியாளர்களை கொண்டு வரும் முடிவுக்கு வந்திருக்கின்றன.
இதன் காரணமாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த பேலிஸ் உள்ளிட்டோரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அதேபோல் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்காரா, மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோரும் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் ஐபிஎல் அணிகள் உரிமையாளர்கள் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்கின்றனர். அதில் பலரின் முதன்மை சாய்ஸாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருக்கிறார்.
ஏனென்றால் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மூலமாக வென்றுள்ளதால், அவரை பயிற்சியாளராக கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அணிகளின் உரிமையாளர்களும் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் கங்குலி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல் மும்பை அணி நிர்வாகம் நேரடியாகவே ராகுல் டிராவிட்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இன்னொரு புறம் பஞ்சாப் அணி நிர்வாகமும், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களும் ராகுல் டிராவிட்டை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் ராகுல் டிராவிட் இதுவரை எந்த அணியுடன் பணியாற்றுவது என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஏனென்றால் ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் வருவதால், ஒரு அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு ராகுல் டிராவிட் கைகளில் அளிக்கப்படும். இதனால் அதற்கேற்ற உரிமையாளர்களுடன் பணியாற்றவே ராகுல் டிராவிட் விரும்புவதாக தெரிகிறது. அதேபோல் ராகுல் டிராவிட் தனது இரு மகன்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.