மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்காக அறிமுகமான அஷ்வனி குமார் அபாரமாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாட்டுக்காக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
அப்போது தான் ஒரே ஒரு வாழைப்பழத்தை மட்டுமே மதியம் உண்டதாக கூறினார் அஷ்வனி குமார். அதற்கு என்ன காரணம் என்பதையும் கூறினார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தீபக் சஹார், ட்ரெண்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அஷ்வனி குமார் மட்டும் தனியாக நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதை அடுத்து ஐபிஎல் தொடரில் தனது அறிமுகத்தில் மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார்.தனது பந்துவீச்சுக்கு பிறகு அஷ்வனி குமார் அளித்த பேட்டியில், "எனக்கு அழுத்தம் இருந்தது. ஆனால், அணியின் சூழ்நிலை என்னை அமைதிப்படுத்தியது. இன்று மதியம் நான் உணவு உண்ணவில்லை. ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும் தான் சாப்பிட்டேன். ஏனெனில் எனக்கு அதிக அழுத்தம் இருந்தது. அதனால் எனக்கு பசிக்கவில்லை."
"நான் நிறைய திட்டங்களை தீட்டினேன். அணி நிர்வாகம் முன்பே என்னிடம் இது எனது அறிமுக போட்டி என கூறி இருந்தது. மேலும், அறிமுகத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடு, உனது திறமையை நம்பி விளையாடு என்று சொன்னார்கள். கேப்டனும் உதவினார். ஸ்டம்புகளை நோக்கி பந்தை வீசுமாறு சொன்னார். நான் விளையாடுவதை எனது கிராமத்தில் அனைவரும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார் அஷ்வனி குமார்.
இந்தப் போட்டியில் அஷ்வனி குமார் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், மனீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியிருக்கிறார். இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. அடுத்ததாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றியைப் பெற்றது.