மும்பை: ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் உடனான பிசிசிஐ ஆலோசனை கூட்டம் வரும் 31ஆம் தேதி நடப்பது உறுதியாகியுள்ளது. மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பதே பிரதான விவாதமாக இருக்கும் என்று உறுதியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் மும்பை அணி தரப்பில் 6 வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கேகேஆர் அணி தரப்பில் ஒரேயொரு வீரரை மட்டும் தக்க வைத்து கொள்ள அனுமதிவிட்டு 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. மறுமுனையில் பஞ்சாப், லக்னோ, குஜராத், டெல்லி உள்ளிட்ட அணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

6 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள அனுமதித்தால், உலகின் தலைசிறந்த 60 வீரர்கள் ஏலத்திற்கே வராமல் ஒதுக்கப்படுவார்கள். குறிப்பாக டாப் 25 முதல் 30 இந்திய வீரர்கள் ஏலத்திற்கு வர மாட்டார்கள். இதனால் 4 வீரர்கள் என்ற எண்ணிக்கையிலேயே வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அணிகளும் பரிந்துரைத்துள்ளன.
அதிலும் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என்றும், 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என்ற வகையில் அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் நட்சத்திர அணிகளின் முதலீடுகளை மதிக்க வேண்டும் என்று பேசப்பட்டுள்ளது. ஏனென்றால் அகாடமி மூலம் வீரர்களை கொண்டு வந்து, மற்ற அணிகளுக்கு தாரை வார்க்க முடியாது என்று அணி நிர்வாகங்கள் கூறுகின்றன.
இதற்கு மதிப்பளிக்கும் வகையில் பிசிசிஐ தரப்பில் 5 முதல் 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி வழங்க முடிவு எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் 2021 மெகா ஏலத்தில் ஆர்டிஎம் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. இதனால் இந்த மெகா ஏலத்திலும் ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்க வேண்டாம் என்றே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் ஆர்டிஎம் வாய்ப்புகள் இருக்கும் போது ஒவ்வொரு அணிகளின் திட்டமும் எதிரணிக்கு எளிதாக தெரிய வரும். இதனால் மெகா ஏலத்தில் குறிப்பிட்ட வீரருக்கு மற்ற அணிகள் இணைந்து விலையை ஏற்றிவிடுவார்கள் என்று வாதிடப்பட்டுள்ளது. இருந்தாலும் 5 முதல் 6 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்கப்பட்டால், மும்பை அணி நிர்வாகம் அதிக பலன்களை அடையும் என்று பார்க்கப்படுகிறது.