சென்னை : அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்து அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது.

அதில் மும்பை, சிஎஸ்கே உள்ளிட்ட நட்சத்திர அணிகள் தரப்பில் 6 வீரர்கள் வரை தக்க வைக்கவும், 2 வீரர்களுக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு பஞ்சாப், டெல்லி, ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் 4 வீரர்களை தக்க வைக்கவும், 2 வீரர்களுக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
சில அணிகள் தரப்பில் இதே விதிகள் தொடர வேண்டும் என்று கூறப்பட்டது. அதேபோல் இந்திய வீரர்களை விடவும் வெளிநாடு வீரர்கள் அதிக ஊதியத்தை ஏலத்தில் பெறுவதாகவும் சில பேச்சுகள் எழுந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், கேகேஆர் அணி தரப்பில் 8 வீரர்களுக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என்று யோசனை கூறப்பட்டது.
இதன் மூலமாக இந்திய வீரர்களும் அவர்களின் மார்க்கெட்டுக்கு ஏற்ப ஊதியத்தை பெற முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் மெகா ஏலம் தொடர்பாகவும், ரீடெய்ன் பாலிசி தொடர்பாகவும் பிசிசிஐ தரப்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைக்கவும், ஒரு வீரருக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகள் பேசுகையில், ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 6ஆக உயர்த்துவதோடு, ஆர்டிஎம் கார்டையும் பயன்படுத்த கொள்ள அனுமதிப்பதே மெகா ஏலத்திற்கு அவசியமில்லை என்று நிலையை உருவாக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஏலம் நடத்தப்படுவதே ஐபிஎல் தொடரின் அழகாக அமைந்துள்ளது. அதனால் ஏலத்திற்கான முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்கம் ஐபிஎல் தொடருக்கே ஆபத்து.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரை ஐபிஎல் தொடருடன் ஒப்பிடத் தேவையில்லை. நாம் இபிஎல் தொடரின் தரத்தையும், வணிகத்தையும் எட்டுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும். சில சீசன்களில் சில அணிகளால் சிறப்பாக செயல்பட முடியாது. அதேபோல் ஏலத்திலும் சொதப்பும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் அதிகளவிலான வீரர்களை தக்க வைக்க அனுமதி வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.