மும்பை: ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே சிஎஸ்கே போன்ற அணிகள் ஒரு மாதத்திற்கு முன் பயிற்சி முகாமை நடத்தும். இதன் மூலம் வீரர்களை ஒருங்கிணைப்பது, வீரர்களின் உடல் தகுதியை கண்காணிப்பது, வீரர்களுக்கு இருக்கும் பேட்டிங் பந்துவீச்சு குறைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை சிஎஸ்கே செய்யும்.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் இதுபோன்று பயிற்சி முகாமை நடத்தி போட்டி நடைபெறும் மைதானங்களை சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்தது. உதாரணத்திற்கு ஆடுகளத்தில் அதிக அளவு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் போட்டி நடைபெறும் போது ஆடுகளம் எதிர்பார்த்த தன்மையை எட்டுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என வழிமுறைகளை விடுத்து இருக்கிறது. அதன்படி சீசன் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் நாங்கள் விளையாட போகும் மைதானத்தில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி ஒவ்வொரு மைதானத்திலும் ஏழு பயிற்சி முகாம்களை மட்டும் தான் ஒவ்வொரு அணியும் நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பயிற்சி முகாமில் மின்விளக்குகளுக்கு கீழ் மூன்று மணி நேரம் வரை நடத்தலாம் என்றும், அதில் 2 மணி நேரம் பயிற்சி ஆட்டங்களாகவோ இல்லை வலைப் பயிற்சியாகவோ நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று பயிற்சி ஆட்டங்களை நடத்தும்போது ஒரே ஒரு ஆடுகளத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் பயிற்சி ஆட்டத்தை மூன்றரை மணி நேரத்திற்கு மேல் நடத்தக்கூடாது என்றும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும் தாங்கள் பயிற்சி ஆட்டங்களை வைக்கப் போகிறோம் என்றால் முன்கூட்டியே பிசிசிஐயிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று போட்டி தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு மெயின் ஆடுகளங்களில் எந்த ஒரு பயிற்சி ஆட்டமோ பயிற்சி முகாமோ நடத்த அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நாட்களில் ஆடுகளத்தில் ஒரே ஒரு முனையை பயன்படுத்தி பெரிய ஷாட்களை ஆடுவதற்காக பயிற்சிகளை வேண்டுமானால் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை செய்ய ஒவ்வொரு அணிகளும் அம்மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் போட்டி நடைபெறும் அன்று மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாது என்றும் இரண்டு அணிகளும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தால் தங்களுக்குள்ளேயே பேசி நேரம் குறித்து தீர்வு காணுங்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐயில் இந்த உத்தரவு காரணமாகத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய சொந்த கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை தற்போது தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.