சந்திகார்: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் எலிமினேட்டர் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை சந்திகாரில் மோத உள்ளது. இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே வில் ஜாக்ஸ், கார்பன் போஸ் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்த தருணத்தில் எலிமினேட்டர் போட்டிக்கு முன்னதாக, மும்பை அணி காயம் தொடர்பான கவலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகியுள்ளது, அதில் மும்பை வீரர்களான தீபக் சாஹர் மற்றும் திலக் வர்மா கால்களில் பேண்ட் எய்ட் அணிந்திருப்பது தெரிகிறது.

இரு வீரர்களும் நடக்கும்போது அசௌகரியத்துடன் காணப்பட்டனர், மேலும் அவர்களின் தொடைகளில் கடினமான டேப் கட்டப்பட்டிருந்தது, இது முக்கியமான போட்டிக்கு முன்னதாக அவர்களின் உடல் தகுதி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தீபக் சாஹர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில் காயம் அடைந்தார்.
அவர் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசினார், ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதே போட்டியில், திலக் வர்மா பீல்டிங்கின் போது முழங்காலில் காயமடைந்தார்.
இந்த சீசனில் திலக் வர்மா 11 இன்னிங்ஸ்களில் 274 ரன்கள் எடுத்துள்ளார், இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். தீபக் சாஹர் 14 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 9.17 என்ற எகானமி ரேட்டில் வீழ்த்தியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, தொடரின் தொடக்கத்தில் மெதுவாக ஆரம்பித்தாலும், தொடர்ச்சியான வெற்றிகளுடன் மீண்டு, பிளேஆஃப் இடத்தை உறுதி செய்தது. லீக் கட்டத்தில் எட்டு வெற்றிகள் மற்றும் ஆறு தோல்விகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தனர். சூர்யகுமார் யாதவ் மும்பை அணி சார்பாக 14 போட்டிகளில் 640 ரன்கள் எடுத்துள்ளார், அதேசமயம் ட்ரெண்ட் போல்ட் 19 விக்கெட்டுகளுடன் அணியின் பந்துவீச்சு பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மும்பை அணி 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும். பிளே ஆப் முறை அறிமுகப்படுத்திய பிறகுஇதுவரை புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.