மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதில் அவர்களின் கருத்துகளை பிசிசிஐ பெற்றுள்ளது. இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் உரிமையாளர்களின் கருத்துகள் அடிப்படையில், ஐபிஎல் தொடருக்கான விதிகளை பிசிசிஐ வெளியிட உள்ளது.
இம்முறை பிசிசிஐ தரப்பில் 4 வீரர்களை ரீடெய்ன் செய்யவும், 3 வீரர்களுக்கு ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தவும் அனுமதியளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், ரபாடா, ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரை தவிர்த்து வேறு யாரும் தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் இந்திய வீரர்களை தக்க வைத்தால் ரூ.11 கோடியில் இருந்து ரூ.16 கோடி வரை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் மற்றவர்களை ஏலத்தில் வாங்கவே பஞ்சாப் அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவை வாங்க சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் போட்டி ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சிஎஸ்கே அணியின் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி அந்த அணி நிர்வாகத்திற்கே உள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக கான்வே இருந்தாலும், ஃபினிஷர் ரோலுக்கான வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் தேடி வருகிறது. அதேபோல் மும்பை அணியை பொறுத்தவரை கடந்த 4 சீசன்களாகவே இஷான் கிஷனின் செயல்பாடுகள் மோசமாகவே உள்ளது.
அவருக்கு கொடுத்த ரூ.15.25 கோடியில் வேறு எந்த விக்கெட் கீப்பரை வாங்கி இருந்தாலும், சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். ஜித்தேஷ் சர்மாவை பொறுத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த சீசனில் மோசமாக விளையாடி இருந்தாலும், சரியான வழிகாட்டுதல் இருந்தால் அபார திறமையை வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது.
இதனால் ஜித்தேஷ் சர்மாவை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்குவதற்கு சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் நிச்சயம் கடுமையான போட்டியை வெளிப்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை தோனியை தக்க வைக்கும் பட்சத்தில், ஜித்தேஷ் சர்மாவை வாங்க அவ்வளவு தீவிரத்தை சிஎஸ்கே நிர்வாகம் காட்டாது என்று சொல்லப்படுகிறது.