மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக ரஹானே விளங்கினார். ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற ரஹானே முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் 14 போட்டியில் விளையாடிய ரஹானே 326 ரன்கள் குவித்தார்.
இதில் இரண்டு அரை சதம் அடங்கும். ரஹானே அந்த சீசனில் 172 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். 2024 ஆம் ஆண்டு சீசனில் 13 போட்டிகளில் 242 ரன்கள் அடித்திருந்தார். டெஸ்ட் வீரராக மட்டுமே அறியப்பட்டு வந்த ரஹானே சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு வித்தியாசமான அதிரடி வீரராக திகழ்ந்தார்.

இந்த நிலையில் ரஹானேவை சிஎஸ்கே தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் வந்ததும் சிஎஸ்கே அணி ஏலம் கூட கேட்கவில்லை. இதனால் முதலில் விலை போகாத ரகானே பின்னர் கடைசி கட்டத்தில் கேகேஆர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி ரஹானேவை எடுக்காததால் அவர் கடும் விரக்தியில் இருந்து இருக்கிறார். சிஎஸ்கே அணி தான் தம்மை நம்பி ஏலத்தில் எடுத்து பெரிய டி20 வீரராக மாற்றியதாகவும் ஆனால் அதே சிஎஸ்கே தற்போது தம்மை ஏலம் கூட கேட்கவில்லையே என்ற சோகம் ரஹானேவின் மனதில் இருந்தது.
இதனால் சையது முஸ்தாக் அலி தொடரில் ரஹானே அபாரமாக விளையாடி வந்தார். ரஹானே கடைசியாக விளையாடிய ஐந்து இன்னிங்ஸில் நான்கு முறை அவர் 50 ரன்கள் அடித்திருந்தார். ஆந்திராவுக்கு எதிராக 95 ரன்கள் விளாசிய நிலையில் இன்றும் அவர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காட்டி இருக்கிறார். விதர்பா அணிக்கு எதிராக மும்பை அணி கால் இறுதி ஆட்டத்தில் இன்று விளையாடியது.
இதில் 222 என்ற இலக்கை மும்பை அணி துரத்தியது. அப்போது ரஹானே தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை காட்டினார். இதன் மூலம் 27 பந்துகளின் அரை சதம் கடந்த ரஹானே, 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரஹானேவின் இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 186 என்ற அளவில் இருந்தது.
இதன் காரணமாக மும்பை அணி 19.2 ஓவர்களில் எல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிஎஸ்கே மீது இருந்த கோபத்தில் தான் ரஹானே இப்படி அதிரடி காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் ரஹானேவை சிஎஸ்கே அணி மீண்டும் ஏலத்தில் எடுத்திருக்கலாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.