சென்னை: மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 2025 ஐபிஎல் சீசனில் தென்னாப்பிரிக்க இளம் புயல் டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி எப்படி வாங்கியது என்பது குறித்த "ரகசியத்தை" அஸ்வின் தனது யூடியூப் சேனலில் போட்டுடைத்ததுதான் இந்த கோபத்துக்கு காரணம்.
அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை சுட்டிக் காட்டி அவரை அணியில் இருந்து வெளியேறுமாறு சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "2025 ஐபிஎல் சீசனின் பாதியில், காயமடைந்த வீரருக்குப் பதிலாக டெவால்ட் பிரேவிஸை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயன்றது. அப்போது வேறு சில அணிகளும் அவரை வாங்க பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், ஏலத்தில் எடுக்கப்படாத வீரரை அடிப்படை விலைக்குத்தான் எடுக்க வேண்டும் என்பது விதி.
பிரேவிஸ் தரப்போ, 'அடுத்த ஆண்டு நான் நல்ல விலைக்குப் போவேன், அதனால் எனக்குக் கூடுதலாகப் பணம் தந்தால் மட்டுமே வருவேன்' என்று கூறியது. இதற்கு மற்ற அணிகள் தயக்கம் காட்ட, சிஎஸ்கே நிர்வாகம் மட்டும் பிரேவிஸ் கேட்ட கூடுதல் பணத்தை 'டேபிளுக்கு அடியில்' கொடுத்து அவரை அணிக்குக் கொண்டு வந்தது" என்று கூறியுள்ளார்.
இந்தத் தகவல் வெளியானதும், சிஎஸ்கே ரசிகர்கள் அஸ்வின் மீது கடும் கோபமடைந்தனர். அணியில் ஒரு வீரராக இருந்துகொண்டு, நிர்வாகத்தின் உள்விவகாரங்களையும், வர்த்தக ரகசியங்களையும் இப்படி பொதுவெளியில் பேசலாமா? என சமூக வலைதளங்களில் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்களின் கோபம் வெறும் கேள்விகளோடு நிற்கவில்லை. கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் அஸ்வின் மீது தொடுத்துள்ளனர். ஒரு ரசிகர், "அணியின் ரகசியங்களை எல்லாம் இப்படி உங்கள் யூடியூப் சேனலில் பேசுவதற்கு, நீங்கள் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு முழு நேரமாக யூடியூப் பார்த்துக் கொண்டிருக்கலாம்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகரோ, "பிரேவிஸுக்கு கொடுக்கப்பட்ட கூடுதல் பணத்தை, உங்களுக்குக் கொடுத்த ரூ.9.75 கோடியில் இருந்து பிடித்தம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குத் தெரியும். இந்த சீசனில் நீங்கள் சரியாக விளையாடாதது மட்டுமல்லாமல், அணியின் பெயரையும் கெடுக்கிறீர்கள்" என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல ரசிகர்கள், "சொந்த வீட்டுக்குத் திரும்பிய பிள்ளை என அஸ்வின் வந்தபோது நாங்கள் கொண்டாடினோம். ஆனால் அவர் இப்படி செய்வார் என நினைக்கவில்லை. அவர் மீதிருந்த மொத்த மரியாதையும் போய்விட்டது" என ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். கடந்த சீசனில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய அஸ்வினின் மோசமான ஆட்டத்தையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் சீசனில், காயம் காரணமாக விலகிய குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக, சிஎஸ்கே அணி ரூ.2.2 கோடிக்கு பிரேவிஸை ஒப்பந்தம் செய்தது. களமிறங்கிய 6 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 225 ரன்களை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி, சிஎஸ்கேவின் மிகப்பெரிய பலமாக பிரேவிஸ் உருவெடுத்தார். சிஎஸ்கேவின் இந்த சாதுர்யமான நகர்வை பலரும் பாராட்டிய நிலையில், அணியின் வீரரான அஸ்வினே அதன் உள்விவகாரங்களை அம்பலப்படுத்தியதுதான் ரசிகர்களின் கோபத்திற்கு முக்கிய காரணம்.
அணியின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் அஸ்வின், சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து தனது எதிர்காலம் குறித்து தெளிவான பதில் வேண்டும் என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவர் இப்படி பேசியிருப்பது, அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே உள்ள விரிசலை அதிகரித்துள்ளது.