சென்னை: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான 2025 ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமது அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
அதன் பின் அவர் தோனியின் ஸ்டம்பிங் பற்றி சிலாகித்துப் பேசினார். அது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. பலரும் சமூக வலைதளங்களில் நூர் அஹமது பேச்சை பகிர்ந்துள்ளனர்.

தோனி மற்றும் தனது ஆட்டம் பற்றி பேசுகையில் நூர் அஹமது, "ஐபிஎல் இல் நான் விளையாடுவது மிகவும் சிறப்பான விஷயமாக உள்ளது. எனது அணியும் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு எனது பங்களிப்பு இருந்தது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது."
"சரியான இடத்தில் பந்தை வீச வேண்டும் என்பது மட்டுமே எனது கவனமாக இருந்தது. சூர்யகுமார் யாதவின் விக்கெட் எனக்கு முக்கியமானதாக அமைந்தது. தோனி அப்போது செய்த ஸ்டம்பிங் இந்த உலகத்தை தாண்டிய விஷயமாக இருந்தது."
"தோனி போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னே இருப்பது மிகப் பெரிய உணர்வை அளித்தது. அவர் எனக்கு மிக பெரிய அளவில் ஆதரவு அளித்தார்" என்று கூறினார் நூர் அஹமது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவ் நூர் அஹமது வீசிய பந்தை தவறவிட்டார்.
அப்போது சூர்யகுமார் கிரீஸுக்கு வெளியே நின்றார். சற்று வைடாக சென்ற பந்தை பிடித்த தோனி 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தினார். அது நூர் அஹமதுவின் முதல் விக்கெட்டாகவும் அமைந்தது. பின்னர் அவர் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணியை முன்னிலையில் நிறுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் குவிப்பையும் தடுத்து நிறுத்தினார்.
பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ரச்சின் ரவீந்திரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 45 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்திருந்தார்.
செய்தி சுருக்கம்: