மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள 63-வது லீக் போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து வேறு நகரத்திற்கு மாற்ற வேண்டுமென டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால் கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் போட்டி புதன்கிழமை இன்று (மே 21, 2025) நடைபெற உள்ளது. ஒரு நாளில் இந்த மாற்றம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எதற்காக இந்தக் கோரிக்கையை அவர் வைத்துள்ளார் என்பது பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது. மும்பையில் கடும் மழை பெய்ய உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்த நான்கு நாட்களுக்கு மும்பையில் கடுமையான மழை பெய்யும் எனவும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி மழையால் கைவிடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே பிளே ஆஃப் சுற்றில் நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி நிலவி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 புள்ளிகளுடனும் உள்ளன.
இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புள்ளியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். அப்போது மும்பை இந்தியன்ஸ் 15 புள்ளிகள் பெறும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 14 புள்ளிகளைப் பெறும். அதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவதற்கான வாய்ப்பை இழக்கும்.
ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தினால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரிக்கும். டெல்லி கேப்பிட்டல்ஸ் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது. அதனால்தான் பார்த் ஜின்டால் இந்தப் போட்டியை மும்பையில் இருந்து வேறு நகரத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவிருந்த போட்டி பெங்களூருவில் இருந்து லக்னோவுக்கு மாற்றப்பட்டது. பெங்களூருவில் மழை பெய்யும் என வானிலை அறிக்கை சுட்டிக்காட்டியதால் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது. அதே காரணத்தைச் சுட்டிக்காட்டிதான் டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளரும் தங்கள் போட்டியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது இந்தப் போட்டியை மாற்றாவிட்டால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியை மாற்றியது ஏன் என்ற கேள்வி எழும். எனவே, பிசிசிஐ கட்டான நிலையில் உள்ளது. அதே சமயம், ஒரு நாளில் ஒரு போட்டியை வேறு நகரத்திற்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லாத விஷயமாகவும் இருக்கிறது.
இது ஐபிஎல் நிர்வாகத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றத்தால் 10 நாட்களுக்கு ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. அதனால் ஐபிஎல் அட்டவணையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு இடையே மழையும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.