சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதை அடுத்து தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதில் மிகவும் நொந்து போய் இருப்பது ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் தான். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2024 ஐபிஎல் தொடர் முதல் செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை அடுத்து அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதனால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர். ஏனெனில், அந்த அணி இந்த ஆண்டு இதுவரையே விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.
இந்த நிலையில் தோனி மீண்டும் கேப்டன் ஆனதால் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என அந்த அணியின் ரசிகர்கள் நம்புகின்றனர். அதனால் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மோசமாக விமர்சித்து வந்தவர்களை எல்லாம் சீண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் சிஎஸ்கே அணி ஆறாவது கோப்பையை வெல்லப்போகிறது எனவும் உற்சாகத்தில் உள்ளனர். அதே சமயம் இது போன்ற ஒரு விஷயம் தங்கள் நாயகன் ரோஹித் சர்மாவுக்கு நடக்காதா? என அவருடைய ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பத்து ஆண்டுகள் செயல்பட்ட ரோஹித் சர்மா கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது முதல் அவரது ஐபிஎல் பேட்டிங் செயல்பாடும் சுமாராகவே இருந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். பாண்டியா தலைமையில் அந்த அணியும் மோசமாகவே செயல்பட்டு வருகிறது. 2024 ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை தான் பிடித்தது.
அதேபோல இப்போதும் அந்த அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.