மும்பை: சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக ஆர்சிபி வலம் வருகிறது. இருந்தாலும் 17 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட இதுவரை ஆர்சிபி அணி கோப்பையை வென்றதில்லை. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய போதும், எலிமினேட்டர் போட்டியிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
இதன் காரணமாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கார சாரமாக மோதி கொண்டனர். இந்த நிலையில் ஆர்சிபி அணி மெகா ஏலத்திற்கு தயாராகி வருகிறது. வழக்கம் போல் விராட் கோலி, சிராஜ், ரஜத் பட்டிதர், மேக்ஸ்வெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 40 வயதை எட்டிவிட்டதால், அவரை ஏலத்தில் வாங்கவே முயற்சிக்கும். இருந்தாலும் ஆர்சிபி அணி புதிய கேப்டனை நோக்கி செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஏலத்திற்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனிலேயே ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அம்பானி குடும்பத்தினர் ரோஹித் சர்மா மீது அன்பை வெளிப்படுத்தினாலும், பயிற்சியாளர் பவுச்சர் உள்ளிட்டோர் ரோஹித் சர்மாவை நடத்திய விதம் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரோஹித் சர்மா மெகா ஏலத்தில் வீரராக பங்கேற்கவே வாய்ப்புகள் உள்ளது.
இதற்கிடையே கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்தார். அதன்பின் உடனடியாக ஆர்சிபி அணி அவரை பேட்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் மெகா ஏலம் வருவதையொட்டி ஆர்சிபி அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வாய்ப்புகள் உள்ளதா என்று தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தினேஷ் கார்த்திக், எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதன் மூலமாக ரோஹித் சர்மா மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் ஆர்சிபி அணி அவரை வாங்க நிச்சயம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரோஹித் சர்மாவை ஆர்சிபி அணி வாங்கினால், விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.