மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவை ரிலீஸ் செய்கிறதா என்பதை யாராவது உறுதியாக சொல்ல முடியுமா என்று லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா கேள்வி எழுப்பியுள்ளார். லக்னோ அணி ரோஹித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியான நிலையில், ரோஹித் சர்மா விவகாரம் குறித்து சஞ்சீவ் கொயங்கா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான விதிகள் நாளை வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. இதனிடையே மும்பை அணியில் இருந்து ஜாம்பவான் வீரரான ரோஹித் சர்மா விலக உள்ளதாகவும், மெகா ஏலத்தில் நேரடியாக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

ஏற்கனவே கேப்டன்சியில் இருந்து ரோஹித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் நீக்கிய நிலையில், தற்போது ஊதியத்தையும் குறைக்க பேசி வருவதாக கூறப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகள் ரோஹித் சர்மாவால் தாராளமான ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் பட்சத்தில், அவருக்கான கிராக்கி மற்ற அணிகளிடையே அதிகரித்துள்ளது.
ரோஹித் சார்மா போன்ற பிராண்ட் மதிப்பு அதிகமுள்ள வீரர் ஏலத்திற்கு வரும் பட்சத்தில், அவரை வாங்க நிச்சயம் 3 முதல் 4 அணிகள் போட்டி போடும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மாவை வாங்குவதற்கு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம் ஆவலாக இருப்பதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா பேசுகையில், முதலில் எனக்கு ஒன்றை தெளிவுபடுத்துங்கள்.. உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ.. ரோஹித் சர்மா மெகா ஏலத்தில் பங்கேற்பாரா என்பது நிச்சயம் தெரியுமா? யாருக்கும் தெரியாது.. அதனால் நாங்கள் வாங்க விரும்புகிறோமா என்ற பேச்சே தேவையற்றது.
ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை ரிலீஸ் செய்து, அவர் ஏலத்தில் பங்கேற்றாலும்.. லக்னோ அணியின் பர்ஸ் மதிப்பில் உள்ள 50 சதவிகித தொகையை ஒரு வீரருக்காக செலவிட முடியாது.. அவருக்கு 50 சதவிகித தொகையை கொடுத்தால், மீதமுள்ள 22 வீரர்களை வாங்க தொகை போதாமல் போய்விடும் சூழல் உள்ளது.
ரோஹித் சர்மாவை வாங்க விருப்பமா என்று கேட்டால், நிச்ச்சயம் அவர் சிறந்த வீரர், சிறந்த கேப்டன். ஆனால் ஒரு வீரரை வாங்குவது விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல.. நம்மிடம் என்ன இருக்கிறது, லக்னோ அணிக்கு என்ன தேவை என்பதை பொறுத்தே வாங்க வேண்டும் என்ரு நினைப்பதாக தெரிவித்துள்ளார். லக்னோ அணி உரிமையாளரின் பேச்சு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்தின் போது, கேஎல் ராகுல் தனக்கு கேப்டன்சி பொறுப்பு வேண்டாம் என்று கூறியதாகவும், அந்த பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க கோரிக்கையை வைத்ததாக கூறப்படுகிறது.
ஆர்சிபி அணியில் எப்படி விராட் கோலி கேப்டன் பொறுப்பை கைவிட்டு, சாதாரண வீரராக விளையாடி வருகிறாரோ, அதே பாணியில் லக்னோ அணியில் தொடர் கேஎல் ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கடந்த சீசனின் போது லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மைதானத்தில் வைத்தே கேஎல் ராகுலை சரமாரியாக கேள்வி எழுப்பியதே காரணமாக பார்க்கப்படுகிறது.