பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவால்ட் பிரெவிஸ் ரிவ்யூ செய்ய அம்பயர் மறுத்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரோகித் சர்மாவும் இதே போன்ற சூழ்நிலையில் இருந்தபோது அவருக்கு மட்டும் ரிவ்யூ செய்ய அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது அம்பயர் முடிவுகளில் உள்ள முரண்பாட்டை காட்டுவதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, ரோகித் சர்மா எல்பிடபிள்யூ (LBW) ஆனதாக அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து விலகிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்த ரோகித் சர்மா, ஆலோசித்து விட்டு ரிவ்யூ கேட்டார். அப்போது நேரலை ஒளிபரப்பில் டைமர் காட்டப்பட்டது.

இதுபோல டிஆர்எஸ் ரிவ்யூ கேட்பதற்கு ஒரு வீரருக்கு 15 வினாடிகள் அவகாசம் மட்டுமே அளிக்கப்படும். ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டபோது டைமர் பூஜ்யத்திற்கு (0) சென்றுவிட்டது. சரியாக 15 வினாடிகள் முடிவடைந்த நிலையிலேயே ரோகித் சர்மா ரிவ்யூ கேட்பதாகக் கேட்டார். அப்போது இது குறித்து விவாதம் எழுந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி என்பதால் தான், ரோகித் சர்மாவுக்கு டைமரில் பூஜ்யம் என்ற எண் வந்த பிறகும் ரிவ்யூ கேட்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவால்ட் பிரெவிஸுக்கு ரிவ்யூ கேட்பதற்கான நேரம் முடிந்து விட்டதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் கொடுக்கப்பட்டார். பின்னர் அவர் எதிர் முனையில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜாவுடன் ஆலோசனை செய்து, ரிவ்யூ கேட்பதாக அம்பயரிடம் சைகை செய்தார். ஆனால் "'நேரம் முடிந்துவிட்டது'" என்ற அம்பயர், ரிவ்யூ செய்ய மறுத்துவிட்டார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு, 'ரோகித் சர்மாவுக்கு ஒரு நியாயம், சிஎஸ்கே வீரருக்கு ஒரு நியாயமா?' என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். அம்பயர் முடிவுகள் சீரற்ற தன்மையுடன் இருப்பதாகவும், குறிப்பிட்ட அணிகளுக்குச் சாதகமாக முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்றது. ஆனாலும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.