மும்பை: கடந்த 3 ஆண்டுகளாகவே தாம் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை என்று குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே தாம் ஒருபோதும் சந்திக்காத நபர்களுடன் இணைத்து பேசப்பட்டு வருவதாக கூறிய சுப்மன் கில், தனது கவனம் முழுக்க கிரிக்கெட் மீது மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதல் உறவில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜியோ மார்ச் கண்காட்சியில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இருவரும் இணைந்து பங்கேற்றனர். அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் அவர்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ஒற்றுமைகள் இருந்து வந்தன.

அதேபோல் சுப்மன் கில் விளையாடும் போட்டிகளை சாரா டெண்டுல்கர் நேரில் வந்து பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் பஞ்சாபி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சாராவை டேட்டிங் செய்வதாக சுப்மன் கில் ஒப்புக் கொண்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் டாஸ் போடுவதற்காக சுப்மன் கில் வந்த போது வர்ணனையாளர் டேனி மாரிசன், சுப்மன் கில் அழகாக இருக்கிறீர்கள்.. விரைவில் திருமணம் செய்யப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வெட்கப்பட்ட சுப்மன் கில், தற்போது திருமணம் என்று பேச்சிற்கே இடமில்லை என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இடையில் காதல் உறவு முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகியது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது காதல் உறவு குறித்து வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், கடந்த 3 ஆண்டுகளாகவே நான் சிங்கிளாகவே இருக்கிறேன். ஆனால் பல்வேறு பெண்களுடன் இணைத்து தொடர்ந்து பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் என் வாழ்க்கையில் சந்திக்காத, பார்த்திடாத நபர்களுடன் இணைத்து பேசப்படும். சில நேரங்களில் என்னுடன் இருக்கும் நபர்களை வைத்து, வேறு ஒருவருடன் இணைத்து பேசுவார்கள்.
தற்போது என் கிரிக்கெட் வாழ்க்கை மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு ஆண்டில் 300 நாட்கள் பயணத்திலேயே இருக்கும் என் வாழ்வில், காதலுக்கு இடமில்லை. தொடர்ந்து பயணித்து வருவதால், ஒருவருக்கு நேரம் கொடுப்பதே பெரிய விஷயம்தான். காதலிக்கும் போது நாம் அந்த நபருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.