மும்பை: 2025 ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி எது என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தனது கணிப்பை கூறியிருக்கிறார். அவர் கூறும் அணியில் தான் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் எனவும், அணியில் இருக்கும் அத்தனை பேருமே போட்டியை வென்று கொடுக்கக் கூடியவர்கள் எனவும் அவர் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக விளையாடியிருந்தது. தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், தான் விளையாடிய கடைசி 6 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அந்த அணியில் பேட்டிங் வரிசையில் அனைத்து வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சிலும் அனைவரும் இதுவரை அதிக விக்கெட்டுகளையும், சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர். எந்த இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி பலவீனமாக இருப்பதாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது.
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், "இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்றால், வேறு எந்த அணிக்குமே ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான தகுதியே இல்லை. அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா இருப்பதைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை. அவர் மட்டுமே ஒரு பாகுபலி போல இருக்கிறார்."
"அத்துடன் அந்த அணியில் டிரென்ட் போல்ட், தீபக் சாகர், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்டியா, கரண் சர்மா மற்றும் கார்பின் ஜோஷ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். அவர்களிடம் இந்த ஆண்டு கோப்பை வெல்வதற்கான அணி உள்ளது. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆண்டு. எந்த அணியாலும் அவர்களை எட்டிப்பிடிக்க முடியாது."
"அவர்கள் ஆறாவது முறையாக கோப்பை வெல்வது நிச்சயம். மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் 11 மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஐந்து முறை கோப்பை வென்ற அணி. உலக தரம் வாய்ந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மூன்று சராசரியான ஐபிஎல் தொடர்களுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது.!" என்றார் ஹர்பஜன் சிங்.