முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது முதலே அவரது நடவடிக்கை குறித்து ரசிகர்கள் சில விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுடனான இந்த சம்பவம் அரங்கேறியது.
2025 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டிக்கான டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா டாஸ் வென்றார். அடுத்து எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார். அந்த நிகழ்வை ஹர்திக் பாண்டியா சமாளித்து விட்டார்.
அடுத்து போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடத் தொடங்கியது. அப்போது சுப்மன் கில் முதல் விக்கெட்டாக வெளியேறினார். வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்டியா ஓடிவந்து சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, அந்த விக்கெட் வீழ்ச்சியைக் கொண்டாடினார். சுப்மன் கில் மீது கோபத்தில் இருந்ததால்தான் ஹர்திக் பாண்டியா இவ்வாறு செய்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
சுப்மன் கில் இதற்கு முன்பும் இதே போல எதிர் அணி கேப்டன்களுக்கு கை கொடுக்காமல் சென்ற விவகாரம் சர்ச்சையாக மாறி இருந்தது. இதற்கு முன், ரிஷப் பண்ட் ஒரு போட்டியின் முடிவில் பேசுவதற்கு வந்த போது சுப்மன் கில் அவரைத் தவிர்த்து விட்டுச் சென்றார்.
தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் சக இந்திய அணி வீரர்களுடன் சரிசமமாக பழக விரும்பவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.