அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வியால் துவண்டு அழுதார். அவர் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார்.
அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், களத்தை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த அந்த அணியின் பேட்ஸ்மேன் மார்க்கஸ் ஸ்டோனிஸ் அவரைத் தேற்றினார். மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்ததோடு, மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு கை குலுக்கிக்கொண்டிருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்ததை அடுத்து அவர்களுடன் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஹர்திக் பாண்டியாவைத் தேற்றினார். இந்தக் காட்சி ரசிகர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் அரை சதம் அடிக்கவில்லை என்றாலும், நான்கு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் சேர்த்திருந்தனர். ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களும், திலக் வர்மா 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 44 ரன்களும், நமன் தீர் 18 பந்துகளில் 37 ரன்களும் எடுத்திருந்தனர்.
அடுத்து 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 55 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அப்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு அதிரடி ஆட்டம் ஆடினார். ஜோஸ் இங்கிலிஸ் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தும், நெஹால் வதேரா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தும் ஒத்துழைப்பு அளித்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து, 19 ஓவர்களில் எல்லாம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.