பரோடா: இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 35 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். இதன் மூலம் மாபெரும் டி20 சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.
ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய ஆல் ரவுண்டர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்து இருக்கிறார். அவர் பரோடா அணிக்காக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடினார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு அவர் பரோடா அணிக்காக ஆடி இருந்தார்.

தான் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற பின் முதல்முறையாக பரோடா டி20 அணிக்காக ஹர்திக் பாண்டியா விளையாடினார். கடந்த ஆண்டு பிசிசிஐ அனைத்து இந்திய அணி வீரர்களையும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுமாறு அறிவுறுத்தி இருந்தது. அதை அடுத்தே ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் விளையாடினார்.
அவர் ஆடிய முதல் போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். ஆறு ஃபோர் மற்றும் ஐந்து சிக்ஸ் அடித்து இருந்தார் ஹர்திக் பாண்டியா. அதன் மூலம் பரோடா அணி, குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் அவர் 74 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 5067 ரன்களும், 180 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். இந்திய வீரர் ஒருவர் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து டி20 போட்டிகளில் சிறந்த இந்திய ஆல் ரவுண்டர்களாக இருப்பது ரவீந்திர ஜடேஜா. அவர் 3684 ரன்கள் மற்றும் 225 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக அக்சர் பட்டேல் இருக்கிறார். அவர் 2960 ரன்கள், 227 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.