மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியில் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஜனவரி மாதம் முதலே இந்திய அணி நிர்வாகத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த இஷான் கிஷன், பின்னர் பிசிசிஐ நிர்வாகிகளின் பேச்சை கேட்டு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றார்.
இருந்தாலும் இந்திய அணிக்கு அவரால் திரும்ப முடியவில்லை. ஆனால் துலீப் டிராபி, இராணி கோப்பை, ரஞ்சி டிராபி என்று இஷான் கிஷன் தொடர்ந்து விளையாடியதன் பலனாக, அவர் மீண்டும் இந்திய அணியின் செட்டப்பிற்குள் வந்திருக்கிறார். இதனிடையே இஷான் கிஷனை பலரும் சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக கிண்டல் செய்து வந்தனர்.

இதுகுறித்து இஷான் கிஷன் பேசுகையில், இந்தியா ஏ அணியில் எனது பெயரை பார்த்த போது கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தது. ஏனென்றால் இது எனக்கு 2வது வாய்ப்பாக கருதுகிறேன். இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி பல வெற்றிகளை பெற வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. ஆனால் எனது ஆட்டம் எனக்கே திருப்தியளிக்கவில்லை. இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருந்தேன்.
தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னை பொறுத்தவரை, ரன்கள் அடிக்க வேண்டும் என்ற பசியுடன் ஒவ்வொரு வீரரும் இருக்க வேண்டும். ஏனென்றால் எப்போதும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. சில நீண்ட நாட்கள் பெஞ்சிலேயே இருக்க வேண்டிய சூழல் வரும். அதனால் அந்த பசி எனக்குள் இருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் இப்போது என்னை நானே மீண்டும் கண்டறிந்துள்ளேன். இம்முறை ரன் பசியுடன் இருக்கிறேன்.
இந்திய அணிக்காக எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயாராகவே இருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர்கள் தான். அதேபோல் பிராக்டிக்கலாக சிந்தித்து பழகியவன் என்பதால், கொஞ்சம் அதிர்ஷ்டமாக செய்தவனாக நினைக்கிறேன். ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுடன் என்னால் அதிக நேரம் செலவிட முடிந்தது. ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த பிராக்டிக்கலான மனிதர்.
என்ன தேவையோ, அதனை மட்டுமே செய்ய வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் கண்ணீர்விட தேவையில்லை. ஹர்திக் பாண்டியாவை பார்த்து தான் அதனை கற்றுக் கொண்டேன். இளம் வீரராக இருக்கும் போதே மும்பை அணியால் வாங்கப்பட்டேன். அங்கு தான் ஹர்திக் பாண்டியாவின் நட்பு கிடைத்தது. அவர் எப்படி சிந்திப்பார் என்று நன்றாக அறிவேன். தொடர்ந்து என்னுடன் ஏராளமான விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டே இருப்பார்.
இப்போது ஹர்திக் பாண்டியாவின் மனநிலையில் நானும் இருக்கிறேன். முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தால் கூட, என்ன நடந்தது என்று நீண்ட நேரம் சிந்திப்பதில்லை. உடனடியாக அடுத்தப் போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கிவிடுகிறேன். சதம் அடித்தாலும் சரி, டக் அவுட்டானாலும் சரி.. அதனை அமைதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் வந்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் வாழ்வில் ஒரு மோசமான காலம் அமையும்.
அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தால், நிச்சயம் அடுத்தடுத்து இடங்களுக்கு முன்னேற முடியும். அதேபோல் சோசியல் மீடியாவில் அதிகளவில் நெகட்டிவிட்டு தான் இருக்கிறது. நாம் சிறப்பாக விளையாடும் போது மக்கள் சாதாரணமாக இருப்பார்கள். ஆனால் மோசமாக செயல்பட்டால், நிச்சயம் கிண்டல் செய்வார்கள். இதனை ஒவ்வொரு விளையாட்டு வீரரும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதற்காக நாம் உடைந்து போக தேவையில்லை. அதனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல பழக வேண்டும்.
ஹர்திக் பாண்டியாவும் அப்படி தான் கிண்டல் செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா அதிகளவிலான ட்ரால்களை எதிர்கொண்டார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் அந்த ட்ரால்கள் எல்லாம் புகழ்ச்சியாக மாறிவிட்டது. சோசியல் மீடியாவை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இப்போது என்னிடம் யாராவது இளம் வீரர்கள் கேட்டால், அவர்களிடம் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருங்கள் என கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.